ஜிந்தோட்டயில் 127 அசம்பாவிதங்கள், தற்போதைய நிலவரம் என்ன..?
காலி கிந்தோட்டை பகுதியில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை வன்முறையாக மாறியதால் மொத்தமாக 127 அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் விசாரணைகள் ஊடாக இவை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். இந்நிலையில் இவை தொடர்பில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோனின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறும் விஷேட விசாரணைகள் தொடர்வதாகவும் இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கிந்தோட்டையில் நிலவிய பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்புக்கு சிறப்புத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிந்தோட்டை மேற்கு, கிந்தோட்டை கிழக்கு, குருந்துவந்த, மஹஹப்புகல, வெலிபிட்டி, மோதர, உக்வத்த, பியதிகம ஆகிய 7 கிராமசேவகர் பிரிவுகளும் மூன்று வலயங்களுக்குள் உள்ளடங்கும் வகையில் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயத்தின் பாதுகாப்பும் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
அதன்படி கிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை ஆகும்போதும், 102 கடற்படையினர், 74 இராணுவத்தினர், 428 பொலிஸார் மற்றும் 100 அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
Post a Comment