சிறுபான்மை கட்சிகளை நிர்ப்பந்திக்கவில்லை - மறுக்கிறார் ஜயம்பதி
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத கலப்பு தேர்தல் முறைமையை தான்தோன்றித்தனமாக வலியுறுத்தி சிறுபான்மை அரசியல் கட்சிகள் நன்மதிப்பை இழந்து விட்டதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்டிருந்த 60சதவீதம் தொகுதி முறைமையும், 40சதவீதம் விகிதாசர பிரதிநித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு முறைமையை ஏற்றுக்கொண்டிருந்தால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் தொகுதி அடிப்படையில் அதிகரித்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர் சிறு அரசியல் கட்சிகளுக்கு ஐம்பதுக்கு ஐம்பது கலப்பு தேர்தல் முறைமையானது நன்மையளிப்பதாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் சில இத்திருத்தத்திற்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் தாங்கள் முழமையான உடன்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.
ஆதேநேரம் சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகவும் ஒரு சில கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும் இத்திருத்தச் சட்ட மூலத்தினை நிறைவேற்றிய முறைமையானது தவறு என்று கூட்டு எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை திருத்தச்சட்டத்தில் முழுமையான திருப்தி இல்லை. ஆனாலும் சிறுபான்மை கட்சிகள் வாக்களிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்று கூறுவது தவறானதொரு விடயமாகும். அவர்களுக்கு அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாத விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் இருந்தது. உண்மையில் பாராளுமன்றத்தின் உள்ளொன்று பேசிவிட்டு பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியில் வேறொன்றைப் பேசுவது அசதாரண விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகளை சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல பல உறுப்பினர்களும் செய்கின்றார்கள். ஆது தவிர்க்கப்படவேண்டிய விடயமொன்றாகும்.
அனைத்து மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்தவதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தினை கொண்டு வந்திருந்த போதும் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருக்கவில்லை. அதன் காரணத்தால் அச்சட்டமூலத்தினை கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான நிலையில் ஆயுட் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
அவ்வாறு உடனடியாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே நடத்தவேண்டும். ஆனால் பல தரப்புக்கள் அதனை விரும்பவில்லை. தொகுதி முறைமையினை கோரினார்கள். பெண்களின் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரினார்கள்.
அப்படியென்றால் ஆயட்காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை தற்போதைய தேர்தல் முறைமையில்(விகிதாசர முறைமையில்) நடத்திய பின்னர் ஏனைய ஆறு மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்தும்போது புதிய தேர்தல் முறைமையினை அமுல்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அதுவும் அசாதாரணமானதொரு செயற்பாடல்லவா? ஆகவே தான் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தேர்தல் நடத்துவதில் சில மாத காலதமாதம் ஏற்பட்டுள்ளமையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அதனை விட செய்வதற்கு வேறு வழியொன்றும் இருக்கவில்லை. அத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டத்தின் பிரகரம் 50சதவீதம் தொகுதி வாரி முறைமை, 50சதவீதம் விகிதாசார முறைமை கொண்ட கலப்பு தேர்தல் முறைமையொன்றே நடைபெறவுள்ளது. இதில் பெண்களுக்கு 25சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தில் முதலில் 60சதவீதம் தொகுதி முறைமையும் 40சதவீதம் விகிதாசார முறைமையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையொன்றே முன்மொழியப்பட்டிருந்தது. இதனை ஆதரிக்குமாறு நான் சிறுபான்மை மக்களின் அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் வணங்காத குறையாகக் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐம்பதற்கு ஐம்பது சதவீதம் அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இந்த விடயத்தில் தெளிபடுத்தலொன்றைச் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் சிறு கட்சியைச் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இதுபோன்று தான் ஜே.வி.பி.யும் சிறு கட்சியாகும். ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது சதவீத கலப்பு தேர்தல் முறைமையால் எமக்கு பாதகமில்லை. நாம் தனியாக தேர்தலில் போட்டியிடுகின்ற போது எமது உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகமாக கிடைப்பதற்கு வழிசமைக்கும்.
ஆனால் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளின் நிலைமை அவ்வாறு அல்ல. தொகுதி முறைமையின் வீதம் அதிகமாக காணப்படுகின்ற பொது மாவட்டம் ஒன்றில் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிரிக்கும். ஆகக் குறைந்தது ஒரு தொகுதியாவது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த விடயத்தினை தெளிவு படுத்தியபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்ருக்கவில்லை.
அவர்கள் தாங்கள் எடுத்த முடிவிலேயே உறுதியில் இருந்து தான்தோன்றித்தனமாக செயற்பட்டார்கள். இதனால் இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்து நன்மதிப்பையும் இழந்து விட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தவது சிறந்ததொன்றாக அமையும் என்பதே தனிப்பட்ட நிலைப்பாடு என்றார்.
Post a Comment