சவூதியின் நல்ல மனசு, திரும்பகிறது மகாவலி - பல விவசாயக் குடும்பங்களுக்கு நன்மை
திருகோணமலை மாவட்டத்திற்கு மகாவலி நீரை திசை திருப்பும் முயற்சி வெற்றியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.
மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (24) நிதியமைச்சில் அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போதே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சவூதி அரேபிய அரசாங்கத்திடம் அனுமதிகோரி அனுப்பப்பட்டிருந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நிதியை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க இத்திட்டத்துக்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பல விவசாயக் குடும்பங்கள் நன்மையடைவதுடன், வருடத்தில் ஒரு முறை மாத்திரமே (மானவரி) பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் இத்திட்டத்தின் மூலம், வருடத்தில் இரண்டு முறைகள் பயிரிடமுடியும்.
இதேவேளை, விவசாயத்தில் நாம் தன்னிறைவடைய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, இன்னும் எமது பொருளாதாரத்தை உயர்த்தக் கூடிய பண்ணை வளர்ப்பு, புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் மகாவலி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் நிதியமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment