வங்கதேசம் வந்தடைந்த ரோஹின்யர்களுக்கு, உதவிகள் சென்றடைவது தாமதம்....
தென்கிழக்கு வங்கதேசத்தில் இருப்பதைப் போன்ற பெரிய அகதி நெருக்கடிச் சூழ்நிலையை சமாளிப்பதில் ஆரம்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இரண்டரை வாரங்கள் முடிந்த நிலையில், உதவி நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் தொடங்கியிருக்க வேண்டும்.
பெரும்பாலான ரோஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்த வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில், அப்படிப்பட்ட எவ்வித உதவி நடவடிக்கைகளையும் காணமுடியவில்லை. உணவு, கூடாரங்கள் ஏற்றிய விமானங்கள் அங்கே ஏதும் இறங்குவதாகத் தெரியவில்லை. கூடாரங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை சாலைகளில் பார்க்க முடியவில்லை.
மிக அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், எவ்வித மனிதாபிமான உதவி நிறுவனங்களும் தங்கள் தொடர்பில் இல்லை என ரோஹிஞ்சா மக்கள் கூறுகின்றனர்.
எல்லை கடந்து வரும்போது தங்களது பெயர், கிராமம் ஆகியவை தந்ததோடு சரி என்றும் அதன் பிறகு எந்த உதவியும் வரவில்லை என்று ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர். பழைய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மோசமான கூடாரங்கள் எல்லாம் அகதி மக்கள் தாங்களே செலவு செய்து அமைத்துக்கொண்டவை. சாலையோரங்களில் புதிதாக வெட்டப்பட்ட மூங்கில் குச்சிகளையும், பிளாஸ்டிக் ஷீட்டுகளையும் விற்கும் கடைகள் முளைத்துள்ளன.
பருவமழைக்கு மத்தியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திறந்தவெளி பகுதியில் தங்கியுள்ளனர். நல்ல உள்ளம் கொண்ட உள்ளூர் வங்கதேச மக்கள் லாரிகளில் வந்து, உணவு உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை கூட்டமாகக் காத்திருக்கும் ரோஹிஞ்சா மக்களை நோக்கி வீசுகின்றனர். ஆனாலும், அங்கு உணவுப்பற்றாகுறை நிடிக்கிறது.
உணவைப் பெற சிறுவர்களும் வயதானவர்களும் கூட்டத்தில் மிதிபடும் சூழல் நிலவுகிறது.
Post a Comment