யார் இந்த, ஹலீமா யாகூப்
சிங்கப்பூர் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாகவும் முதல் பெண் ஜனாதிபதியாகவும் ஹலீமா யாக்கூப் தேர்தல் எதுவுமின்றி நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹலீமா கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
தான் தேர்தல் இன்றி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டமை, சிங்கப்பூர் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கும் வகையில் காத்திரமாக செயலாற்றுவதற்கு எவ்வித தடையாகவும் இருக்கப் போவதில்லை எனவும், மலாய் சமூகத்திற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டிருந்தாலும் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும் சேவையாற்றவுள்ளதாகவும் அவர் நேற்று முன்தினம் மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் ஜனாதிபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மூவரில், மலாய் சமூகத்துக்கென வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹலீமா மாத்திரமே உரிய தகுதி நிலையை அடைந்திருந்தமையால் நேரடியாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த டொனி டொன் கெங்யாமின் பதவிக்காலம் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த ஜனாதிபதியாக மலாய் இனத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரமே போட்டியிடலாம் என மேலதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும் ஆளும் மக்கள் செயற்பாட்டு கட்சியின் உறுப்பினருமான 63 வயதுடைய ஹலீமா யாக்கூப் உட்பட ஐவர் ஜனாதிபதி வேட்பாளர்களாக விண்ணப்பித்தனர். இவர்களில் மூவரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. எனினும் அவர்களில் இருவரின் வேட்பு மனுக்கள் உரிய தகுதி நிலையை அடையாத காரணத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து மலாய் இனத்தைச் சார்ந்த ஹலீமா யாக்கூப் தேர்தலை சந்திக்காமலேயே சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டு நேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பல்வேறு எதிர்ப்புக்கள், தடைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக செயற்பட்டு சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக ஹலீமா 2013 இல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
யார் இந்த ஹலீமா?
ஐந்து பிள்ளைகளை கொண்ட மிகவும் வறிய குடும்பமொன்றில் ஹலீமா இறுதியாக பிறந்தார். ஹலீமாவுக்கு 8 வயதாகும்போது காவலாளியாக பணியாற்றி வந்த தந்தை இறந்ததும் அன்று தொடக்கம் ஹலீமாவின் தாயாரே உணவகம் ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து குடும்பப் பொறுப்பை தலைமேற் சுமந்து கொண்டார்.
பாடசாலை நேரம் தவிர்ந்து மிகுதி நேரத்தில் தாயாருக்கு உதவியாக அதே உணவகத்தில் மேசை துடைத்தும், பாத்திரம் கழுவியும் வந்ததாக தனது சுயசரிதையில் ஹலீமா குறிப்பிடுகின்றார். வறுமையுடன் போராடுவது மிக கடினம். எனினும் அதையும் தாண்டி வெற்றியை சுவைக்க வேண்டும் எனும் வெறியை அது உருவாக்கி விடும் என்கிறார்.
தாயாருடன் உணவகத்தில் வேலை பார்த்து வந்தமையால் அதிக நாட்கள் அவரால் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியாமல் போனது. இதன் காரணத்தினால் 2 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த ஹலீமா சிங்கப்பூர், -சீனா பெண்கள் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டார்.
பின்னர் தஞ்சொங் கடோங் பெண்கள் பாடசாலையில் சேர்ந்து கல்வியில் ஊக்கம் காட்டிய ஹலீமா சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். சட்டத்துறையில் இளமாணி பட்டம் பெற்றார்.
1978 இல் தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைந்து மூன்று தசாப்தங்களாக பல்வேறு வகிபாகங்களை வகித்து வந்த ஹலீமா 2001 இல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2011 இல் இளைஞர், விளையாட்டு, சமூக அபிவிருத்தி அமைச்சுப் பதவி ஹலீமாவுக்கு வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக ஹலீமா 2013 இல் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் முஸ்லிம் பெண்கள் ஒழுங்கமைப்பில் அங்கம் வகிக்கும் ஹலீமா பெண்களின் உரிமை மற்றும் வயோதிபர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் காத்திரமான முன்னெடுப் புக்களை மேற்கொண்டுள்ளார்.
ஹலீமா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் ஹிஜாப் அணிவதை வழக்கமாகக் கொண்ட முஸ்லிம் பெண் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
Post a Comment