தனிநாடாக சுதந்திரம் பெற ஈராக் குர்திஷ்கள் முயற்சி - துருக்கி, ஈரான், அமெரிக்கா எதிர்ப்பு
தனிநாடாக சுதந்திரம் பெற ஈராக் குர்திஷ்கள் இம்மாத இறுதியில் நடத்தவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை அகற்றிக்கொள்ளும்படி ஐ.நா பொதுச் செயலாளர் அன்டொனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான போர் நடவடிக்கையில் இடையூறை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈராக் மத்திய அரசுக்கும் குர்திஷ் பிராந்திய அரசுக்கும் இடையிலான எந்த ஒரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பொன்றில் குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். ஈராக்கிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நடத்த குர்திஷ் பிராந்தியம் திட்டமிட்டுள்ளது.
எனினும் இதற்கு ஈராக் மத்திய அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இதற்கு எதிராக இராணுவ ரீதியில் தலையிடுவது குறித்தும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த சர்வஜன வாக்கெடுப்பை நிறுத்தும்படி அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை கோரியதோடு அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஈரானும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
Post a Comment