ராஷிதாவின் வேண்டுகோள்
-By Anas Abbas-
எனது பெயர் ராஷிதா. வயது 25. அரக்கானின் வன்முறை துவங்குவதற்கு முன்னர் ஒரு எளிய வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேன். எங்களிடம் சில வயல் நிலங்கள் இருந்தன. அதில் நாம் விவசாயம் செய்தோம். எங்களிடம் ஒரு வீடு இருந்தது. அதில் எனது கணவரோடும் மூன்று குழந்தைகளோடும் வாழ்ந்தோம். அது ஒரு அமைதியான வாழ்வு.
நெருக்கடி ஆரம்பிக்கும் வரை மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நாம் அனைத்தையும் விட்டுச் சென்றுள்ளோம். எங்கள் வீடுகளும் வயல் நிலங்களும் தீப்பற்றி எரிகின்றன. இதற்கு மேல் எங்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியுமில்லை. எங்கள் கிராமத்தில் இராணுவம் எங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்தபோது, எங்கள் குழந்தைகளை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்று மறைந்திருந்தோம்.
இராணுவம் அகன்றதன் பின்னர் வீட்டை சென்றடைந்து பார்த்தபோது, பல மனிதர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன். நாங்கள் பதுங்கியிருந்த காட்டிலிருந்து எல்லைப் புறத்தை நோக்கி எட்டு நாட்கள் நடந்தோம். நாம் கடும் பசியோடும் தாகத்தோடும் பயணித்த போது, மரங்களின் இலைகளைத் தவிர எமக்கு முன்னாள் உண்பதற்கு எதுவும் இருக்கவில்லை. எனது குழந்தைகள் உண்பதற்கு ஏதேனும் தாருங்கள் கேட்டபோது கொடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இருக்கவில்லை.
ஒரு சிறிய படகில் எல்லையைத் தாண்டிச் சென்றோம். அது மிக ஆபத்தான பயணம். பயணம் சென்ற படகு எந்த வேளையிலும் மூழ்கிவிடலாம் என்ற அச்சத்தில் குழந்தைகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்.
நான் பங்களாதேஷில் வாழ்வது மகிழ்ச்சியானதல்ல. எங்களிடம் எங்களூரில் 0.4 ஹெக்டேயர் நிலம் இருந்தது. சில கால்நடைகள் இருந்தன. ஒரு வீடு இருந்தது. ஒரு அழகான கிராமம் இருந்தது. நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம். இப்போது நாங்கள் படும் துன்பம் எப்படிப்பட்டது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும்.
எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற நம்பிக்கையுமில்லை. பங்களாதேஷ் மக்கள் அன்பானவர்கள். ஆடைகள், உணவுகளையெல்லாம் தருகின்றனர். இதுவரை எந்த சர்வதேச நிறுவனத்தையும் நாங்கள் காணவில்லை. அவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும். உண்பதற்கு எமக்கு உணவு வேண்டும்.
வெளி உலகிற்கு நான் வழங்கும் ஒரே செய்தி எங்களுக்கு அமைதி வேண்டும். அமைதியின்றி எதிர்காலமில்லை.
(இது மியன்மாரின் ரெக்கைன் மாநிலத்திலிருந்து இராணுவ துப்பாக்கிச் சூட்டிலிருந்து பங்களாதேஷுக்குத் தப்பி வந்த ஓர் இளம் குடும்பப் பெண் அல் ஜஸீராவுக்கு அனுப்பி வைத்த கடிதமாகும்.)
இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் கிடலக்கும்.
ReplyDeleteயா அல்லாஹ், அல்லல் படும் இம்மக்களுக்கும்,துயரத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நீயே பொறுப்பாகயிருந்து உதவியளிப்பாயாக! ஆமீன்.
ReplyDelete