உங்களுக்கு மகிழ்ச்சியா? என்றார் மைத்திரி - இனி நித்திரை வரும் என்றார் ரணில்
இதோ நான் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான செயலகத்தை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டு விட்டேன். தற்போது உங்களுக்கு மகிழ்ச்சியா?“ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மங்களவிடம் கூறியதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
அதேவேளை வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திடும் போது, “ இனி மங்களவிற்கு நித்திரை வரும்” என சிரித்தவாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார். நேற்றைய தினம் இரவே குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சகம் வெளியிட்டுள்ளது.
குறித்த, சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய நாளை(15) முதல் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலக நடைமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான புதிய சட்டமூல வரைவை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Post a Comment