முஸ்லிம் தலைவர்கள் பற்றி, பஷில் அம்பலப்படுத்தும் முக்கிய விடயங்கள்
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் இறுதித் தருணங்களில் எம்மை விட்டு விலகிச் சென்றனர். எனினும் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களது கட்சித் தலைமைகளை விட முன்னதாகவே எங்களை விட்டும் விலகிச் சென்று விட்டனர் என்பதை நாம் அறிந்து கொண்டோம். இது முஸ்லிம் கட்சித் தலைவர்களை பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் தயாரில்லை என்பதையே எமக்கு தெளிவுபடுத்துகிறது என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு முஸ்லிம் தலைவர், அவர் எம்மை விட்டு விலகுவதற்கு ஒருநாள் முன்னதாக என்னை சந்தித்து சுமார் 3 மணித்தியாலங்கள் உரையாடினார். எந்நிலையிலும் ராஜபக் ஷவிற்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் மக்கள் உறுதியாக உள்ளதாகவும், அதனால் அவரது ஆதரவு எவ்விதத்திலும் எமக்குப் பயனளிக்கப் போவதில்லை எனவும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இதையே என்னிடம் கூறியது. இது, மக்கள் தலைவர்களை பின்பற்ற தயாரில்லை என்பதையே உணர்த்துகிறது. முஸ்லிம் மக்கள் அவர்களது தலைவர்களை விட ஒருபடி மேல் சென்றுவிட்டார்கள். இதனையே நாம் மலையகத்திலும் கண்டோம்.
கடந்த காலங்களில் பலதரப்பட்ட அரசியல் இடைத் தரகர்கள் மூலமாக சிறுபான்மை மக்களை கவர்ந்து வந்தோம். இந்நடைமுறை தற்போது இல்லாமல் போய்விட்டது. சுதந்திரக் கட்சி நிறுவப்பட்டபோது பண்டாரநாயக்க, பதியுதீன் மஹ்மூத் போன்ற முஸ்லிம் ஆளுமைகளை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சியின் முன்னணி உறுப்பினர்களாக இஸ்லாமிய சமூகத்தினர் இருந்தனர்.
1977 இல் தோல்விக்கு பின்னர் அந்நடைமுறை இல்லாது போய்விட்டது. அதன் பின்னர் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஊடாகவே முஸ்லிம் சிறுபான்மையை கவர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன முஸ்லிம் தலைவர்களை இரண்டாம், மூன்றாம் மட்டத்திலேயே வைத்து நோக்கின.
அஷ்ரப் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் முஸ்லிம் தலைவர்கள் முக்கிய கட்சிகளில் தங்களது இருப்புக்களை இழந்து வந்தனர். இது பாதகமான விடயமாகும். அஷ்ரப் அதனை பின்னரே உணர்ந்தார். அதனால்தான் தேசியப் பட்டியலில் சிங்களவர் ஒருவரை பாராளுமன்றத்திற்கு பிரேரித்தார்.
அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதுபற்றி அக்கறை செலுத்தவில்லை. சிறுபான்மை கட்சிகளின் தயவில் அன்றி சிறுபான்மை மக்களை பிரதான கட்சிகள் நேரடியாக அணுக வேண்டும்.
உண்மையில், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மறைவு எமக்கு பாரிய இழப்பாகும். அஸ்வரின் மரணம் மற்றுமொரு பேரிடியாகும். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக கிராம மட்டத்தில் முஸ்லிம் தலைவர்களை இனங்கண்டுள்ளோம். மாகாண மட்ட முஸ்லிம் தலைவர்கள் எம்மிடம் உள்ளனர். இனி வரும் காலங்களில் தேசிய ரீதியில் முஸ்லிம் தலைவர்களை எமது கட்சி அறிமுகப்படுத்தும்.
(ஹஸன் இக்பால்)
Ippethan muslim thevepaduthupole
ReplyDelete