Header Ads



இலங்கை அணி 2019 உலகக் கிண்ணத்திற்கு, நேரடி தகுதி பெற்றது - ICC அறிவிப்பு


இலங்கை கிரிக்கெட் அணி, 2019 இல் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நேரடி தகுதியைப் பெற்றுள்ளது.

இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் சபை  இன்று (20) அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் நகரில், நேற்று (19) இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, இவ்வாய்ப்பினை இலங்கை அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள், சர்வதேச கிரிக்கெட் அணி தரப்படுத்தலில் முறையே 86 மற்றும் 78 புள்ளிகளை பெற்று 8 மற்றும் 9 ஆவது இடங்களில் காணப்படுகின்றன.

தரப்படுத்தலில் 8 இடங்களை வகிக்கும் அணிகள் உலகக் கிண்ண போட்டிகளுக்கு, நேரடியாக தகுதி பெறும் எனும் நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளையாவது வெற்றி பெறுவதன் மூலம் அவ்வாய்ப்பை உறுதி செய்யலாம் என இருந்தது. 

ஆயினும் அத்தொடரை 5-0 என இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணி அவ்வாய்ப்பை இழந்தது.

இதேவேளை, தரப்படுத்தலில் 9 ஆவது இடத்திலுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்நிலை சாதகமாக அமைந்த போதும், இங்கிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5-0 அல்லது 4-0 (ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி/ முடிவின்றி) என கைப்பற்றும் நிலையில் அவ்வாய்ப்பை பெறலாம் எனும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய (19) இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அவ்வாய்ப்பை இழந்ததன் மூலம் இலங்கை அணிக்கு உலகக் கிண்ண தொடரில் விளையாடுலதற்கான நேரடி தகுதி கிட்டியுள்ளது.

10 அணிகள் விளையாடும் உலகக் கிண்ணத் தொடரில் இணையவுள்ள ஏனைய இரு அணிகளைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் 2018 இல் இடம்பெறவுள்ளதோடு, இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் அணி தரப்படுத்தலில் உள்ள 8 ஆம் இடத்திற்கு வெளியே உள்ள மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள், உலக கிரிக்கெட் லீக் சம்பியன் கிண்ண தொடரில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் மற்றும் உலக கிரிக்கெட் லீக் பிரிவு 2 இல் முதல் இரு இடங்களை பெற்ற அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.