இஸ்லாத்தை ஏற்ற யுவதி, பெற்றோரும் அனுமதி - IS இல் இணைவதாக பொய் சொன்ன பொலிஸார்
-M.I.Abdul Nazar-
மூன்று வாரங்களுக்கு முன்னர் படிப்பதற்காக வெளியில் சென்ற ஆயிஷா, என அழைக்கப்படும் அதிரா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஆயிஷா தான் விரும்பி ஏற்ற மார்க்கத்தை பின்பற்றுவதற்கு தடை ஏற்படுத்தப்படமாட்டாது என அவரது இந்து மத பெற்றோரால் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் உறுதிமொழி அளிக்கப்பட்டதையடுத்து அவரை பெற்றோருடன் செல்லுமாறு மன்று அறிவுறுத்தியது.
மேலும் ஆயிஷா இஸ்லாமிய கற்கை நெறியினைத் தொடர்வதற்கு அனுமதியளிப்பதாகவும் அவரது பெற்றோர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர் தனது பெற்றோருடன் சென்றார்.
ஆயிஷா கடந்த 27 ஆம் திகதி கன்னூரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து ஹொஸ்டர்க் நீதிமன்றத்தினால் மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரது பெற்றோர் தனது பிள்ளையை தம்மிடம் தருமாறு கோரியதனையடுத்தே நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டது.
தான் விரும்பியே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகவும் தனது கல்வியைத் தொடர விரும்புவதாகவும் ஆயிஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயிஷாவின் பெற்றோரும் அவரது விருப்பத்திற்கு அமைவாக சமய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படமாட்டாது என உறுதியளித்தனர்.
எனினும் குறித்த சிறுமி ஐ.எஸ்.தீவிரவாதக் கொள்கைகளினால் கவரப்பட்டிருக்கக் கூடும் என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
ஆயிஷா கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி கசறாகோட் மாவட்டத்தின் உடுமாவிலுள்ள தனது இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தார். வீட்டைவிட்டுச் செல்வதற்கு முன்னதாக இஸ்லாத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டேன் என்றும் இஸ்லாம் தொடர்பான தனது அனுபவங்களையும் 15 பக்கங்கள் கொண்ட கடிதமொன்றில் எழுதி வைத்திருந்தார்.
வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் தனது தாய்வழி மாமாவுடன் தொடர்பு கொண்ட ஆயிஷா பெற்றோர் வீட்டில் தன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என அஞ்சுவதாக தெரிவித்திருக்கின்றார்.
கன்னூரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த ஆயிஷா, கன்னூரிலுள்ள சினேகிதி ஒருவரது இல்லத்தில் தான் தங்கியிருப்பதாகவும், இஸ்லாத்தினை தொடர்ந்து பின்பற்றுவதற்கு தனது பெற்றோர் அனுமதிப்பார்களாயின் அவர்களோடு செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். எந்த வித வற்புறுத்தலுமின்றி தான் சுயமாகவே இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
'நான் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்ளப்போகிறேன் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நான் இது வரை எனது கடவுச்சீட்டைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை. என்னை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்திக் கதைப்பதையிட்டு நான் கவலையடைகின்றேன் ஐ.எஸ்.அமைப்புடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. நான் எனது பெற்றோரை நேசிக்கின்றேன். என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் வசிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் நான் இஸ்லாத்தை கற்றுக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த பல ஆண்டுகளாக நான் இஸ்லாத்தைக் கற்று வருகின்றேன். முன்னர் அதனை பெற்றோர்கள் அங்கீகரித்துமிருந்தனர்' என அவர் மேலும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Masha Allah ..
ReplyDeleteAll praise be to Almighty Allah