ஜப்பானிய போர்க்கப்பல், அம்பாந்தோட்டை வந்தடைந்தது
ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்ல முன்னர், சிறிலங்கா கடற்படையின் ‘சமுத்ர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன் இணைந்து, ஜப்பானிய போர்க்கப்பலான அமகிரி பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.
பாதுகாப்பு அணி II இன் தளபதி கப்டன் கோகே சாய்டோ தலைமையிலான ஜப்பானிய கடற்படை அணி,சிறிலங்கா கடற்படையுடன் நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ‘அமகிரி’ என்ற போர்க்கப்பல் ஜப்பானின் ‘அசகிரி’ வகையைச் சேர்ந்த நாசகாரி கப்பலாகும்.
Post a Comment