அம்பாறையில் அபாயகரமான சூழ்நிலை, கட்டுப்படுத்த உதுமாலெப்பை அழைப்பு
அம்பாறை மாவட்டத்தில், என்றும் இல்லாதவாறு போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகக் கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவா் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (02) அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலுள்ள சில பிரதேசங்களில் கேரளக் கஞ்சா, ஹெரோய்ன் போன்ற போதைப்பொருட்கள் மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றமையால், பாடசாலை மாணவா்களும் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும், போதைப்பொருளுக்கு அடிமையாகக் கூடிய சந்தர்ப்பம் அதிகக் காணப்படுகின்றது.
“எனவே, இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதிர்கால சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
“இந்தப் போதைப்பொருட்களை, அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக விநியோகிப்பவர்கள் தொடர்பாக, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு, அவர்களைப் பாரபட்சமின்றிக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment