Header Ads



குழந்தையான ரவி, போட்டுத்தாக்கும் விமல்

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் குழந்தைத்தனமானவை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச விமர்சித்துள்ளார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி மலர்ந்து விட்டதாக மார்தட்டியவர்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் நாம் சுட்டிக்காட்டினோம். எமது கருத்தை நம்பாது மக்களையும் அவர்கள் தவறாக வழிநடத்தினர்.

எனினும், இன்று உண்மை அம்பலமாகியுள்ளது. இதனால், நல்லாட்சிக்காக பாடுபட்டதாக கூறுபவர்கள் கதிகலங்கி போயுள்ளனர் என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த அரசுதான் நாட்டில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டது. அதற்கு இடமளிக்கக்கூடாது என வீரவசனம்பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது செய்வது என்ன? பாரிய திருட்டுகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, தான் வசிக்கும் வீடு அலோசியஸின் பெப்பச்சுவலர் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிதியால் வாங்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார்.

அப்படி தெரிந்திருந்தால் அங்கு சென்றிருக்கமாட்டார் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

தான் வாங்கிய வீடு பற்றி ரவியின் மனைவி அவருக்குக் கூறவில்லையா? இரவிலாவது இருவரும் சந்தித்துக்கொள்வது இல்லையா? எனவே, மக்களை முட்டாளாக்கும் வகையில் குழந்தைத்தனமாகவே ரவி கருணாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவர் எப்படி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பதவியை வகிக்க முடியும்? இதனால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும் என்றும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.