Header Ads



இரத்தினக்கல் வர்த்தகரின், மனைவி கடத்தல்


இரத்தினபுரி பிரதேசத்திலிருந்து 5 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள ‍போதிலும், கடத்தப்பட்ட பெண் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப் பெற வில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி புதிய நகர பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 27 ஆம் திகதி  காலை 7. 30 மணியளவில்  34 வயதான குறித்த பெண் கடத்தப் பட்டுள்ளார். 

இந்நிலையில், தனது மனைவி காணாமல் போயுள்ளதாக அப்பெண்ணின் கணவரான இரத்தினக்கல் வர்த்தகர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடத்தல் இடம்பெற்ற வேளையில் முறைப்பாட்டாளரான வர்த்தகரும் அவரது மகளும் வர்த்தக அலுவல் நிமித்தம் வீட்டிலிருந்து  வெளியேறியிருந்த நிலையில் கடத்தப்பட்டுள்ள பெண்ணும் அவரது மகனும் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்து கடத்தல்காரர்கள் அப்பெண்ணை கடத்திச் செல்லும் காட்சிகள்  அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சீசீரிவி கெமராவில் பதிவாகியுள்ளன. அதன்போது  தனது தாய் கடத்தப்பட்டமை தொடர்பில் சிறுவயதான மகன் அயலவர்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் வருவதற்குள் கடத்தல்காரர்கள் முச்சக்கர வண்டியில்  அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

தனது தாய் கடத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் இலக்கத்தை அவரது மகனான சிறுவன் குறித்து வைத்து விசாரணைகளுக்கு உறுதுணையளிக்கும் வகையில் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த நிலயைில் அதனைக்கொண்டு முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்ட போதிலும் கடத்தப்பட்டப் பெண் மற்றும் அவரைக் கடத்திச் சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்   இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரெ.கிறிஷ்ணகாந்)

No comments

Powered by Blogger.