ரவி விவகாரம் - பிரதமரும், ரணிலும் இறுதி முடிவெடுப்பர்
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது விசாரணை வலையத்தில் இருக்கின்றார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முடிவெடுப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முடிவுக்காக கட்சி உறுப்பினர்கள் காத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கலந்துரையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருதுகின்றனர். இது குறித்த இறுதி முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, அடுத்த வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அடுத்த வெளிவிவகார அமைச்சர் யார் என்பது குறித்த கேள்விகளும் தற்போது எழுந்துள்ளன.
இந்நிலையில், கலாநிதி சரத் அமுனுகமவே அடுத்த வெளிவவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், திலக் மாரப்பன அடுத்த வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment