Header Ads



நீதியரசர் ஜியாவுத்தீனின் மனிதாபிமானம், தடுமாறிய போலீஸ்காரர்கள்..!


தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார். 

வேறு வழியின்றி, அங்கிருந்த ஒரு கடையில் பன்னை திருடி சாப்பிட்டார்.

கடைக்காரர், வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். மறுநாள், நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கு குறித்த விபரத்தை போலீசாரிடம் கேட்டார், மாஜிஸ்திரேட், ஜியாவுதீன்.

'ஐயா, பசிக்காக, பன்னை திருடி விட்டான்' என, போலீசார் கூறினர். அதை கேட்டு கடுப்பான நீதிபதி, 'பசின்னு ஒரு பன்னை திருடி விட்டான்; அதுக்குப் போய் சிறையா' என்றார்.

'இன்னும் புலன் விசாரணை முடியவில்லை' என்றனர், போலீசார்.

அதற்கு, மாஜிஸ்திரேட், 'இதிலே என்னய்யா இன்வஸ்டிகேஷன்' என்றார்.

வாலிபரை பார்த்த அவர், 'நேத்து காலை, ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனியா?' எனக் கேட்டார்.'ஆமாங்கய்யா போனேன்' என, வாலிபர் தலையாட்ட, 'அதெல்லாம் சரி, எங்க போன' எனக் கேட்டார், மாஜிஸ்திரேட்.

'போலீஸ் ஸ்டேஷன்லே தான்யா' என, வெட்கத்துடன் சொல்ல, போலீஸ் பக்கம் திரும்பினார், மாஜிஸ்திரேட்.

'அப்புறம் இதிலென்னய்யா இன்வஸ்டிகேஷன்; அவன் திருடின பன்னை, உங்க ஸ்டேஷன்லே 
இன்னைக்கு வேறு விதமா விட்டுட்டு வந்துட்டான்.

ஆக, திருடு போன, 'பிராபர்ட்டி ரிகவரி' ஆயிடுச்சில்ல. அப்புறம் எதுக்கு ஜெயில்' என, மாஜிஸ்திரேட் கேட்க, இன்ஸ்பெக்டரும், ஏட்டும் 'திருதிரு'வென முழித்தனர்.

பசிக்கு திருடிய வாலிபருக்கு, பெரிய சைஸ் பன்னும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தர, மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார்.

மேலும், சொந்த ஊர் திரும்ப, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார், நீதியரசர் ஜியாவுத்தீன்.

நீதி என்பது, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேடும் சட்டப் புத்தகங்களில் இல்லை; இதயங்களில் தான் இருக்கிறது என, அனைவருக்கும் புரிய வைத்த, மாஜிஸ்திரேட்டிற்கு நன்றி.

No comments

Powered by Blogger.