6 மாதங்களில் முழு அமைச்சரவையும் இராஜினாமா..?
நல்லாட்சி அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஏற்றவகையில் செயற்படாத அரச அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே நாட்டின் பொதுச் சேவை ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு குருநாகல் பண்டுவஸ்நுவரவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது கல்வித்துறையில் உரிய முன்னேற்றத்தைக் காணமுடியாதுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் அரச சேவை என்பன நிலைகுலைந்துள்ளன. இவ்வாறான ஸ்திரமற்ற நிலையினை அரசாங்கமே தோற்றுவித்துள்ளது. அரசாங்க அதிகாரிகள் ஆயிரம் பேரை அழைத்து அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கமைவாக பணியாற்றுமாறும் அல்லாது போனால் அதிகாரிகள் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிவரும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த முறையில் சேவையாற்றிய பல அரச அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சில அதிகாரிகளை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலரை பதவி விலக்கியுள்ளனர். ஆகவே நல்லாட்சி என்பது பெயரளவில் மாத்திரம் உள்ளது. ஆனால் நடைபெறுவது அதற்குப் புறம்பான ஆட்சியாகும்.
நல்லாட்சியிலேயே பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறியுடன் தொடர்புடையவர்கள் சிக்கிக்கொள்ளும் தற்போதைய சூழலில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ரவி கருணாநாயக்கவின் பெயருக்குப் பதிலாக எனது பெயர் இருந்திருக்குமாயின் அதற்கெதிரான நடவடிக்கைகள் எவ்வாறிருந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்த பின்னர் அரசாங்கம் அவரை இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டது. எனினும் அவர் பதவி விலகியதன் பின்னர் அவரை ஒரு வீரராக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அத்துடன் அரசாங்கம் தற்போது அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக் ஷ மற்றும் பைஸர் முஸ்தபாவையும் இராஜினாமா செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு சென்றால் இன்னும் ஆறு மாதங்களில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ய வேண்டிவரும் என்றார்.
Post a Comment