Header Ads



பொய்காரர் ஆனந்த சாகரருக்கெதிராக, வழக்குத் தாக்கல் - றிஷாட் பதியுதீன்


சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன் சதொசவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்குகெட்டிகே, சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன், சீனி இறக்குமதியாளர்களின் உப தலைவர் மற்றும் அந்த சங்கத்தின் ஊடகச்செயலாளர் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொண்டு இது தொடர்பில் விளக்கமளித்தனர்.  அமைச்சர் கூறியதாவது,

கொழும்புத்துறைமுகத்தில் இருந்து சுங்கத்திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் மூடி, சீல் வைக்கப்பட்டு ஒருகொடவத்தைக்கு கொண்டுவரப்பட்ட சீனிக்கொள்கலனை வில்பத்துவிலிருந்து கொண்டுவந்ததாக ஆனந்த சாகர தேரர் கூறுவது அவர் ஒரு பொய்காரர் என்பதை நிரூபிக்கின்றது. இந்த விடயத்தில் என் மீது தொடர்ந்தும் அவர் அபாண்டங்களையும் வீண் பழிகளையும் சுமத்தி வருகின்றார். 

கொக்கேயின் விவகாரத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும்  எந்தத் தொடர்புமில்லை. இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சீனியை இறக்குமதி செய்யவுமில்லை. வாரா வாரம் டெண்டர் மூலம் சீனியைக் கொள்வனவு செய்கின்றோம். அதே போன்றே இம்முறையும் டெண்டர் மூலம் தெரிவுசெய்யப்படிருந்த நிறுவனமொன்று அந்தச் சீனியை இரத்தமலானை சதொச களஞ்சிசாலைக்கு  கொண்டுவந்த போது எமது சதொச ஊழியர்கள் கொள்கலனை திறந்து பார்த்த போது வித்தியாசமான பார்சல்களைக் கண்டு சதொச தலைவருக்கு  அறிவித்தனர். அதன் பின்னர் சதொச தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய சதொச அதிகாரிகள் கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தனர். இதுதான் உண்மை நிலை.

இதனைக்காரணமாக வைத்து சதொசவையும் என்னையும் தொடர்புடுத்தி நாசகார சக்திகளும் அரசியல் பிற்போக்கு சக்திகளும் இனவாத ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும் தொடர்ச்சியாக திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன. என் மீதும் அபாண்டங்களை சுமத்துகின்றனர்.

சதொச நிறுவனம் நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது. நன்மை செய்தவர்களுக்கு இவர்கள் வழங்கும் பரிசுதானா இது?

பிளாஸ்டிக் அரிசி என்ற மாயயயைக் கிளப்பி சதொச நிறுவனத்தின் மீது கடந்த காலங்களில் பழி சுமத்தினர். அதே போன்று இப்போது கொக்கேயின் விவகாரத்துடன் சம்மந்தப்படுத்துகின்றனர். சதொசவின் வளர்ச்சியை பொறுக்க மாட்டாத காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் அதற்குக் களங்கம் ஏற்படுத்தம் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.