பயங்கரவாத சட்டத்தின்கீழ், ஞானசாரரை கைது செய்யலாம் - விக்ரமபாகு
-விடிவெள்ளி-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏனைய மதத்தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால் அதேசட்டத்தின் கீழ் ஞானசார தேரரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்ளும் போது அதனை குழப்புவதற்கு இனவாதிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் மஹரகம பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் பொதுபலசேனாவின் ஒப்பந்தங்களை நிறைவேற்றிவரும் நபராக இருந்துள்ளதுடன் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடையவர் என தெரியவருகின்றது. குறித்த சந்தேக நபரூடாக நாட்டில் இடம்பெற்றுவரும் நாசகார சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தலைமறைவாக இருக்கும் ஞானசார தேரரை கைதுசெய்வதற்கு பொலிஸாரால் முடியாமல் போயுள்ளது. அத்துடன் அவரை கைதுசெய்யும் போது அதற்கு அரசியல் தலைவர்களின் அனுமதி கிடைப்பதில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கின்றார். மக்களின் ஆதரவும் அரசியல் தலைவர்களின் அனுமதி இல்லாத நிலையில் கைதுசெய்யும்போது பல பிரச்சினைகளுக்கு பொலிஸார் முகம்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் தெரித்துள்ளார்.
அத்துடன் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அனைத்தும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிகரானதாகும். அதனால் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஏனைய மதத்தலைவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தால், ஞானசார தேரரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காவி உடை அணிந்ததற்கான சட்டத்தை நிலைநாட்ட முடியாது என தெரிவிக்க முடியாது,
எனவே எந்த சீருடை அணிந்த மதத்தலைவராக இருந்தாலும் சட்டத்துக்கு அனைவரும் பொதுவாகும். அத்துடன் காவி உடை அணிந்ததற்காக ஒரு வரை தேரர் என்று தெரிவிக்க முடியாது. அவர் சாசனத்தை பாதுகாக்கக்கூடியவாக இருக்கவேண்டும் என்றார்.
இவர் ஒரு சிறந்த மாந்தருக்கு ஓர் முன்மாதிரி மனிதன்.
ReplyDelete