மியன்மார் அகதிகளுக்கு, இலங்கை கரம் கொடுக்குமா..?
- அபூ ஆக்கில் - விடிவெள்ளி-
மியன்மாரில் காணப்படும் பெளத்த மேலாதிக்கச் சக்திகளின் கடும்போக்குத்தனத்தால் அங்கு நீண்டகாலமாக கொதிப்பு நிலை காணப்படுகின்றது. மியன்மார் ராக்கைன் மாநிலத்தில் வசிக்கும் ரோஹிங்யா இன முஸ்லிம்களை இலக்குவைத்து, டைம்ஸ் சஞ்சிகையினால் பெளத்த தீவிரவாதி என கூறப்பட்ட அசின் விராது தேரர் தலைமையிலான கடும்போக்கு அமைப்பு பல அட்டகாசங்களை புரிந்து வருகின்றது. பல முஸ்லிம் கிராமங்களில் எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அடித்தும் எரித்தும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மட்டுமன்றி, சொந்த இடங்களிலிருந்து அடித்து துரத்தப்பட்டுள்ளனர். பலர் சொந்த நாட்டுக்குள் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு இடம்பெறும் அட்டூழியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள சொந்த இடங்களிலிருந்து தப்பி வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுகொண்டிருக்கின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் வழியாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்தோனேஷியா மற்றும் மலேசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தஞ்சம் புகுந்துகொண்டிருக்கின்றனர்.
கடல்மார்க்கமாக மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றமையால் அண்மைக்காலமாக பல நூறு உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு கடல்மார்க்கமாக மியன்மாரிலிருந்து வெளியேறி வந்த மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்பரப்பில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கடல்மார்க்கமாக சிறிய ரக படகொன்றில் செல்லும்போது இலங்கைக்கு வடக்கே இந்திய இலங்கை கடல் எல்லையில் அப்படகு மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை இந்திய மீனவர்கள் காப்பாற்றி தமது படகில் ஏற்றிச்சென்றபோது அவர்கள் திசை மாறி இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்ததாக கூறப்படுகின்றது.
பின்னர் அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். 30 மியன்மார் அகதிகளில் 7 பெண்கள் 7ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் அடங்குகின்றனர். மேலும் இரு இந்தியர்களும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 5 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்த எமக்கு எந்தவொரு சலுகைகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கும் மியன்மார் முஸ்லிம் அகதிகள், மீண்டும் மியன்மாருக்கு செல்வதற்கு விரும்பவில்லை எனவும், அவ்வாறு சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த 30 மியன்மார் நாட்டை சேர்ந்த முஸ்லிம் மக்களும் கடந்த 2012ஆம் ஆண்டு அங்கு காணப்பட்ட இன ஒடுக்குமுறை காரணமாக புகலிடம் கோரி இந்தியாவிற்கு சென்றிருந்தனர். இதன்போது டில்லியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் அங்கு வழக்கு இடம்பெற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் புகலிடம் கோரியே அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது விபத்தில் சிக்கிய நிலையில் மியன்மார் அகதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட அகதிகள் கடற்படை வைத்தியர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களை காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட 32 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை இம்மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் யாழ். சிறைச்சாலைக்கு மாறப்பட்டு அங்கு இரு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் கடந்த செவ்வாயன்று மீண்டும் யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறநாட்டில் குடிபுகுதல் சட்டம், பிரிவு 45Cயின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸார் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் சார்பில் ஆஜரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்டத்தரணிகள் ருஷ்தி ஹபீப் மற்றும் சைனாஸ் மொஹமட் ஆகியோர் அகதிகளை அவர்களது நாட்டிற்குத் திருப்பியனுப்பவேண்டாமென நீதிபதியை வேண்டிக் கொண்டனர்.
அகதிகளை யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் (UNHCR) கண்காணிப்பு மற்றும் உதவிகளின் கீழ் தடுப்பு முகாமில் வைப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக்கொள்ளும்படி நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். ஆர்.ஆர்.ரி.அமைப்பு நீதிவானிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, நீதிவான் அவர்களை சிறைக்கு அனுப்பாது மிரிஹான தடுப்புக்காவல் முகாமுக்கு அனுப்பி வைக்க உத்தரவு வழங்கினார். அகதிகளுக்கு முழுமையான வைத்திய வசதிகளை வழங்குமாறும், குறிப்பாக கர்ப்பிணித்தாய்க்கு இந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிவான் பொலிஸாருக்குத் தெரிவித்தார். சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் மிரிஹான முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் முஸ்லிம்கள் 30 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்வது குறித்து, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் காரியாலயம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் தரவுகளை திரட்டி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் தருணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது வெளிவிவகார அமைச்சு. அத்துடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆலோசனை கிடைக்கும்வரை மியன்மார் அகதிகள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க காத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஒலுவில் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் 2013 ஆம் ஆண்டு 88 மியன்மார் அகதிகளை கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். இதுவரை 2013 ஆம் ஆண்டிலிருந்து 268 படகு மூலம் சட்ட விரோதமாக குடியேற முயன்ற குடியேற்றவாசிகளான அகதிகளை கடற்படையினர் காப்பாற்றியுள்ள நிலையில் அவர்களில் 45 வீதமானோர் மியன்மார் நாட்டை சேர்ந்த ரோஹிங்யா இன முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
First of all Sri Lanka should learn a lot from this..Sri Lanka is not part of 1954 convention on Referees..Sri Lanka has no hisotry of sheltering anylon asylum seekers so far ...it can be first of its kind..Sri Lanka can amend it's immigration laws to support people like this on humanitarian ground.or seek international help to shelter them in SL...it should seek advice of UN refugees council..alternatively it should approach some countries that provide help for refugees
ReplyDelete