ICC சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி 8 தூதுவர்களில் சங்கக்காரவும் ஒருவர்
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான சம்பியன் தூதுவர்களாக இலங்கையின் குமார் சங்கக்கார உட்பட எட்டு பிரபல வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை பெயரிட்டுள்ளது.
குமார் சங்கக்காரவைவிட பாகிஸ்தானின் ஷஹித் அவ்றிடி, பங்களாதேஷ் ஹபிபுல் பஷார், இங்கிலாந்தின் இயன் பெல், நியூஸிலாந்தின் ஷேன் பொண்ட், அவுஸ்திரேலியாவின் மைக் ஹசி, இந்தியாவின் ஹர்பஜன் சிங், தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோரும் சம்பியன் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமார் சங்கக்கார 2002 முதல் 2013வரை ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ‘‘சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதுவர்களில் ஒருவராக சர்வதேச கிரிக்கெட் பேரவை என்னை பெயரிட்டுள்ளமை எனக்கு கௌரவமாக இருக்கின்றது. இந்த வாய்ப்பை வழங்கிய பேரவைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
கடந்த காலங்களில் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றிய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியுடன் நெருக்கமாக செயற்பட எனக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதற்கு எனது பங்களிப்பை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்’’ என சம்பியன்ஸ் தூதுவர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ள குமார் சங்கக்கார தெரிவித்தார்.
‘‘இன்னும் இரண்டு வருடங்களில் இதே சூழலில் நடைபெறவுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான முன்ஆயத்தமாக மீள் எழுச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இளம் இலங்கை அணி பயன்படுத்திக்கொள்ளும் என நான் நம்புகின்றேன்’’ எனவும் சங்கக்கார தெரிவித்தார்.
குமார் சங்கக்கார 404 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 25 சதங்கள், 93 அரைச் சதங்கள் அடங்கலாக மொத்தம் 14,234 ஓட்டங்களைக் குவித்தவராவார்.
இந்த எட்டு தூதுவர்களும் மொத்தமாக 1,774 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 51,906 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளனர். இவர்களால் 48 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் 838 விக்ெகட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதிமுதல் 18ஆம் திகதிவரை லண்டன் ஓவல், பேர்மிங்ஹாம் எஜ்பஸ்டன், கார்டிவ் வெல்ஸ் ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணமான நிசன் கிண்ணம் ஐக்கிய இராச்சியத்தில் சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்படும்போது இந்த எட்டு தூதுவர்களும் அதில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அத்துடன், நலனுக்கான கிரிக்கெட் பயிற்சி நிலையங்களில் நடத்தப்படும் பயிற்சிகளின்போது கிரிக்கெட் மேதைகளுடன் (எட்டு தூதுவர்கள்) பாடசாலை பிள்ளைகள் விளையாடுவதற்கான திட்ட நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எட்டு கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) ஆசிரியர் பீடத்தில் இணைக்கப்படுவதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கான முன்னாய்வு கட்டுரைகளையும் அணிகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கட்டுரைகளை யும் ஐ.சி.சி. யின் இணையத்தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுவர்.
Post a Comment