'முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்துக்கும், இந்த அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை'
மாயக்கல்லி மலையடிவாரத்தில் முஸ்லிம்களின் காணி சுவீகரிக்கப்பட்டு விகாரை நிர்மாணப் பணிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி கருத்து தெரிவிக்கையில்;
‘கிழக்கில் பல பிரதேசங்கள் முஸ்லிம்களின் காணிகள் தொல்பொருள் பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாயக்கல்லி மலையடிவாரம் போல் எதிர்காலத்தில் பல காணிகள் சுவீகரிக்கப்பட இதுவே ஆரம்பமாக அமையும்.
தொல்பொருள் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும் மத ரீதியான காணி ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது.
இவ்வாறான செயல்கள் இனிமேல் இடம்பெறக் கூடாதென்றே முன்னைய மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். தோல்வியடையச் செய்வதில் பங்குதாரர்கள் ஆனார்கள். என்றாலும் முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை என்றார்.
இறக்காமம் மாயக்கல்லிப் பகுதியில் இடம்பெற்று வந்த முறுகலையடுத்து இப்பிரதேசத்துக்குள் எவரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை உட்பிரவேசிக்கக் கூடாதென அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் உத்தரவொன்றும் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு
மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் தனியார் காணியை ஆக்கிரமித்து அங்கு பலாத்காரமாக பௌத்த விகாரை அமைப்பதற்கு அம்பாறை நீதிமன்றினால் இடைக்காலத் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அம்பாறைக் கச்சேரியில் நேற்றுக்காலை நடைபெற்ற கூட்டத்திற்கு அக்காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள முஸ்லிம் மக்களின் காணிகளில் அத்துமீறி விகாரை அமைக்க எடுத்த முயற்சிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக நீதிபதி சசிகலா லக்மாலி தசநாயக்கவின் உத்தரவிற்கிணங்க இடைக்காலத் தடைஉத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
“சட்டம், நீதி போன்ற விடயங்களில் நம்பிக்கை கொண்டு செயற்படும் எமக்கு கடும்போக்குவாதிகளைக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானத்திற்கு எமது ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என பெயர் குறிப்பிட விரும்பாத காணி உரிமையாளர் தெரிவித்தார்.
எங்களிடமிருந்த பூர்வீகக் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் 2 ஏக்கர் தரப்படும் என்ற ஒருதலைபட்ச முடிவுக்கும் எங்களது இணக்கம் பெறப்படாமலும் எங்களது பள்ளிவாசல் தர்மகர்த்தா குழுவினரை அழைத்து தீர்மானங்கள் பெறப்படாமை குறித்தும் கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாக மற்றும் ஒரு காணிச்சொந்தக்காரர் தெரிவித்தார்.
மேலும் கடும்போக்குவாதிகளின் நெறிப்படுத்தலால் அரங்கேற்றப்படும் இந்நாடகத்தினால் இறக்காமம் பிரதேசத்தில் என்றும் எப்போதும் தேங்காயும், பிட்டும் போல் வாழ்ந்துவரும் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே கசப்பான உணர்வுகள் ஏற்பட்டுள்ளமை கவலையைத் தருகின்ற விடயமாகும் என்றும் பிரதேச முஸ்லிம்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹசன் அலி அவர்கள் மஹிந்த அரசாங்கத்தின் அநீதிகளை கடுமையான தொனியில் எதிர்த்து வந்தார் .தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் என்பதால் மிகவும் மிருதுவான தொனியில் எதிர்க்கின்றார் .
ReplyDelete