விகாரை அமைக்க சுவீகரிக்கப்பட்ட, முஸ்லிம்களின் காணி எல்லையிடப்பட்டது
-ARA.Fareel-
இறக்காமம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விஹாரை அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 2 ½ ஏக்கர் காணி நேற்று முன்தினம் நில அளவை அதிகாரிகளால் எல்லையிடப்பட்டது.
குறித்த காணிகள் பள்ளியான் செயினுதீன் மற்றும் ஆதம் லெவ்வை சமீமா ஆகியோருக்குச் சொந்தமானவைகளாகும். முஸ்லிம்களின் காணிகள் திடீரென சுவீகரிக்கப்பட்டு அளவை செய்யப்பட்டுள்ளமைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, மாயக்கல்லி மலைப்பிரதேசத்திற்கு அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் எவரும் நுழையாதவாறு இடைக்காலத் தடை உத்தரவு அமைப்பதற்கான காணிகள் பிரித்தெடுப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேவேளை, மாகாண காணியாளர் அனுர தர்மதாஸ, அம்பாறை மாவட்டச் செயலாளர் துஷித்த வணிகசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கமைவாக வருகை தந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுடன் இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர், காணிச் சொந்தக்காரர்கள் சார்பாகவும், பிரதேச மக்கள் சார்பாகவும் தமது காட்டமான எதிர்ப்பினை வெளிப்படுத்தியும், எதிர்ப்பினைக் காட்டியும் வருகைதந்த பொலிஸ் உயர் அதிகாரிகளும் நில அளவை உத்தியோகத்தர்களும் தங்களுக்கு மேல்நிலை அதிகாரிகளின் பணிப்புரைக்கமையவே உரிய இடத்தினை அளந்து அதாவது திணைக்கள பட வரைபில் குறிப்பிட்டதற்கமைவாக பிரிவு 52 தொடக்கம் 55 வரை (4 Lote) 2.5 ஏக்கர் அளவிடப்பட்டு எல்லாக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் எந்தவொரு பௌத்த பிரஜையினது குடியிருப்புகள் இல்லாத போதும் மேற்கூறப்பட்ட திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் அபகரித்தமையானது நல்லாட்சியிலும் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் செயலாகும் என பல்வேறு தரப்பினரும் அங்கலாய்க்கின்றனர்.
இதேவேளை, இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ள 2 ½ ஏக்கர் காணிகளின் உரிமையாளர்கள் இருவர் நேற்று இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டிருந்தும் அவர்கள் அங்கு செல்லவில்லை.
காணி உரிமையாளர்களான செயினுதீன் மற்றும் ஆதம் லெவ்வை சமீமா ஆகிய இருவரும் உதவிக் காணி ஆணையாளருடனான பேச்சுவார்த்தைக்கு நேற்று இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியபோது குறிப்பிட்ட காணி உரிமையாளர்கள் இருவரும் இன்று (நேற்று) பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தும் அவர்கள் சமுகமளிக்கவில்லை. அவர்கள் வீடுகளில் இல்லையென்றும் அக்கரைப்பற்றுக்குச் சென்றுள்ளதாகவும் சிலரால் தெரிவிக்கப்பட்டன.
அவர்களுக்கு பிரதேச செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அழைப்புக் கடிதங்கள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். அவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவது தொடர்பாக உதவி காணி ஆணையாளரினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.
Post a Comment