1996 உலகக் கிண்ண வெற்றி நாயகர்கள், கிரிக்கெட் துடுப்பின் வடிவில் சொகுசுக் குடியிருப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நலன்களைக் கவனிக்கவென 1996 உலக கிண்ண வெற்றிநாயகர்கள் அனைவரும் உதவிக் கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி வழங்கிய வெற்றி நாயகர்கள், ‘96 வெற்றி நாயகர்கள் சதுக்கம்’ ((’96 Legends’ Square’) என்ற பெயரில் நிருமாணிக்கப்படவுள்ள சொகுசு குடிமனைகள் கொண்ட 69 மாடி கட்டடத் தொகுதியின் வருவாய் மூலம் 500,000 இலட்சம் ரூபாவை முன்னாள் வீரர்களின் நலன்களுக்கான நிதியத்தில் வைப்பிலிடவுள்ளனர்.
‘96 வெற்றி நாயகர்கள் சதுக்கம்’ தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட நிகழ்வில் பேசியபோது மேற்கண்ட தகவலை உலகக் கிண்ண சம்பயின் அணித் தலைவர், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலகக் கிண்ண சம்பியன் அணியில் இடம்பெற்ற 14 வீரர்களில் பன்னிருவரும் ‘96 வெற்றி நாயகர்கள் சதுக்கம்’ என்ற பெயரில் குடிமனை கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் வில்ஸ் ரியல்டர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் பிரதிநிதிகள் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
21 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூரில் (1996 மார்ச் 17) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 7 விக்கட்களால் வெற்றிபெற்று உலக சம்பியனான இலங்கை அணியில் இடம்பெற்ற 14 வீரர்களும் இந்த குடிமனை கட்டடத் தொகுதியின் சிறப்பு தூதர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
‘‘சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் (எமது முன்னோடி) வீரர் ஒருவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டபோது அன்னாரது மகன் என்னிடம் கூறிய விடயம் என்னைப் பெரிதும் புண்படுத்தியது. அதன் காரணமாக எமது முன்னோடி கிரிக்கெட் வீரர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதென நாங்கள் அனைவரும் முடிவெடுத்தோம்.
எமது முன்னோடிகள் எங்களுக்கான சரியான பாதையைக் காட்டியிராவிட்டால் நாங்கள் உலக சம்பியனாகி இருக்க முடியாது. மேலும் அரசாங்கமோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமோ முன்னாள் வீரர்களின் நலன்களில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் மெல்பர்னிலும் இரண்டு போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நிதி திரட்டினோம். அந்த நிதியைக் கொண்டு இரண்டு முன்னாள் வீரர்களுக்கு உதவினோம்’’ என்றார் அர்ஜுன ரணதுங்க.
இந்தக் கட்டடத் தொகுதி ஏனைய கட்டடத் தொகுதிகளைப் போன்று வடிவமைக்க வில்ஸ் ரியல்டர்ஸ் பிறைவேட் லிமிட்டெட் பிரதிநிதிகள் திட்டமிட்டனர். ஆனால் இந்தத் கட்டடத் தொகுதி கிரிக்கெட் பந்து, கிரிக்கெட் துடுப்புகளின் தோற்றத்தில்நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதில் அர்ஜுன குழுவினர் உறுதியாக இருந்தனர்.
இதன்படி அர்ஜுனவின் ஆலோசனையின் பேரில் 69 மாடிகளைக் கொண்ட இந்த சொகுசு குடிமனைகள் கட்டடத் தொகுதி கிரிக்கெட் விளையாட்டை நினைவுப்படுத்துவதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சம்பியனாகி 25 வருடங்கள் பூர்த்தியாகும்போது இந்த கட்டடத் தொகுதியும் பூர்த்தி செய்யப்பட்டு பாவனைக்கு விடப்படவுள்ளது.
மேலும் முழு உலகிலும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடையதாக அமைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாகவும் அமையவுள்ளது. இந்தக் கட்டடத் தொகுதியில் கிரிக்கெட் நூதனசாலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
Post a Comment