Header Ads



குழந்தைகளிடம் அதிகரிக்கும் நீரிழிவு

பணக்கார நோய் என்று முன்பு அழைக்கப்பட்ட நீரிழிவு, இப்போது எல்லோர் மீதும் கருணையோடு பாரபட்சமில்லாமல் பாதித்து வருகிறது. முன்பு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த நீரிழிவு... முந்தைய தலைமுறையில் 40 வயதிலேயே வந்துவிட்ட நீரிழிவு... இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.

‘‘இந்தியா - மேற்கு வங்கத்தைச் சோந்த க்ரித்தி தவான்(Krithi Thawan) என்ற 5 வயது சிறுமிக்கு அடிக்கடி அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாள். ஏதேனும் கிருமித்தொற்றாக இருக்கலாம் என்ற கோணத்தில் அவளை பரிசோதித்தார்கள் மருத்துவர்கள்.

‘காரணம் ஒன்றுமே இல்லையே’ என்று மருத்துவர்கள் குழம்பியபோதுதான், ‘அடிக்கடி தண்ணீர் குடிக்கிறாள். அடிக்கடி சிறுநீர் கழிக்கிறாள்’ என்று அவளுடைய தாயார் க்ளு கொடுத்தார். ‘இதெல்லாம் நீரிழிவுக்கான அறிகுறியாச்சே’ என்று யோசித்த மருத்துவர்கள், சந்தேகத்துடனே ரத்தப்பரிசோதனை செய்தார்கள்.

ரிசல்ட்... க்ரித்திக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்து அதிர்ந்து போய்விட்டார்கள். க்ரித்தி மட்டும் இல்லை; 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 வயதுக்குட்பட்ட 90 ஆயிரம் குழந்தைகள் டைப் 1 டயாபடீஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதேபோல் உடல்பருமன், உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படுகிற டைப் 2 டயாபடீஸும் குழந்தைகளிடம் அதிகரித்து வருவதாக American journal of medicine கூறியிருக்கிறது.

குழந்தைகளிடம் அதிகரித்து வரும் நீரிழிவு அபாயம் பற்றி நாளமில்லா சுரப்பி மருத்துவர் ராம்குமாரிடம் பேசினோம்...

‘‘நீரிழிவில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும்போதோ அல்லது முழுமையாக சுரக்காத நிலை ஏற்படும்போதோ, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உயர்கிறது. இதனை டைப்-1 டயாபடீஸ் என்கிறோம். சுரக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோன் அளவுகளை உடல் அங்கீகரிக்க முடியாத நிலையால் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பது டைப் 2 டயாபடீஸ் ஆகும்.

டைப் 1 டயாபடீஸ் குழந்தைப் பருவத்தின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். பொதுவாக 6 முதல் 13 வயதுக்குள் டைப் 1 ஏற்படுகிறது. டைப் 2 டயாபடீஸ் வயதானவர்களை மட்டுமே தாக்கி வந்த நிலைமாறி, தற்போது குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்’’ என்பவர், எவ்வகையான குழந்தைகள் டைப் 2 டயாபாடீஸால் பாதிக்கப்படுகின்றனர் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.

‘‘குழந்தையின் வயது, உயரத்துக்கேற்ற எடை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்ததாக ரத்தகொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டும். அந்தந்த பாலினத்தைச் சேர்ந்த பிள்ளை களின் எடையைவிட 85 சதவீதம் அதிகம் இருந்தாலோ அல்லது உயரத்துக்கு ஏற்ற எடையைவிட 120 சதவீதம் அதிகம் இருந்தாலும் அந்தக் குழந்தைக்கு டைப் 2 டயாபடீஸ் இருக்க வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற டைப் 2 டயாபடீஸ் குழந்தைகளை சோதித்து பார்க்கும்போது 100 பேரில் 50 பேருக்கு கல்லீரல் கொழுப்பு(Fatty liver) அதிகமாகவும், 5 பேரில் 4 பேருக்கு ரத்தக்கொழுப்பு(Blood Cholestrol) அதிகமாகவும் இருக்கிறது. அதேபோல தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் 50 சதவீதம் குழந்தைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால் 100 சதவீதம் வாய்ப்பு உண்டு.

டைப் 1 டயாபடீஸ் வந்த குழந்தைகள் அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள். உடலில் ஏற்படும் நீர் இழப்பினால் தாகம் ஏற்பட்டு அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். நீர்ச்சத்து குறைவதால் பலவீனம் ஏற்பட்டு சோர்வாகவும் காணப்படுவார்கள். டைப் 2 டயாபடீஸ் பாதித்த குழந்தைகளுக்கு இதுபோல் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. சில நேரங்களில் பல மாதங்களுக்குப் பிறகுதான் டைப் 2 டயாபடீஸை உணர முடியும். அதன்பிறகு உடல்சோர்வு, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

நீரிழிவு வராமல் தடுக்க வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை மாற்றங்களை குழந்தைகளிடத்தில் மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு வந்துவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு போன்ற சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டிய குழந்தைகள் மருத்துவரின்
அறிவுரைப்படி மருந்தின் அளவை கடைப்பிடித்து வர வேண்டும்!”

குழந்தைகளிடம் நீரிழிவு வராமல் தடுக்க பெற்றோருக்கு சில ஆலோசனைகள் சொல்கிறார் உணவியல் நிபுணர் ஜனனி.‘‘ஒருநாளில் இன்றைய குழந்தைகள் உணவின்மூலம் எவ்வளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் அதிர்ச்சியாகவே இருக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட், சாஸ், ஜாம், பிஸ்கெட், கேக், பிரட் போன்ற நொறுக்குத்தீனிகள் எல்லாமே சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள்.

நூடுல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், பப்ஸ் போன்ற உணவுகள் எல்லாவற்றிலுமே பதப்படுத்திகளையும், அறிவுறுத்தப்பட்ட அளவைவிட உப்பு, சர்க்கரையையும் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பிப் பருகும் மென்பானங்களில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் இந்த குளிர்பானங்களின் லேபிளில், ‘இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல மில்க்‌ஷேக், பழச்சாறுகளிலும் சர்க்கரை க்யூப்களை அதிகமாக சேர்க்கும் பழக்கம் இருக்கிறது.

இப்படி இனிப்பு, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் உணவுகளைத் தொடர்ந்து அளவுக்கு மீறி சாப்பிடும்போது உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு உட்பட பல பிரச்னைகளில் போய்விடுகிறது. இந்நிலையை மாற்ற கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, சிறுதானியங்களில் செய்யும் இனிப்பு வகைகள், கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்று நம்நாட்டு உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்து கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு முடிந்தவரை தடா போட வேண்டும்.

அரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களில் செய்த டிபன் வகைகள், சிற்றுண்டி வகைகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் ஜூஸ், சூப் போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். சர்க்கரை சேர்க்காத ஃப்ரூட் ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

நீரிழிவு பற்றியும் ஆரோக்கியக் கேடான உணவுப்பழக்கம் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிப் புரிய வைக்கும் கடமையும் பெற்றோர், ஆசிரியர், உறவினர்களுக்கு உண்டு. கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்களை அனுமதிக்காமல் முடிந்தவரை பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என வெளியிடங்களில் விளையாட கூட்டிச் செல்வதும் அவசியம்.’’

No comments

Powered by Blogger.