ஆளும் கட்சி கூட்டத்தில், காரசார வாதப்பிரதிவாதங்கள் - ரணிலின் நச் பதில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கருத்து காரணமாக ஆளும் கட்சியின் கூட்டத்தில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை ஆளும்கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.
அண்மைய நாட்களில் அதுரலிய ரதன தேரர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகின்றார்.
இந்த விமர்சனங்கள் தொடர்பில் ஆளும்கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் ஜனாதிபதி மட்டுமே வெற்றியீட்டினார் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டவில்லை எனவும் வெளியிட்ட கருத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்வியைத் தொடர்ந்து ஆளும்கட்சிக் கூட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
தேவை என்றால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக அதுரலிய ரத்ன தேரர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்த வாதப் பிரதிவாதங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியிருக்காவிட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகள் இணைந்து செயற்படும் போது பொறுமையுடனும் முரண்பாடு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment