Header Ads



'முஸ்லிம்கள் சாமர்த்தியமாக, செயல்பட வேண்டிய காலமிது'

 -பாரூக் பஸ்­மில்கான் -

இலங்கை சூழல் தற்­போது முஸ்­லிம்­க­ளா­கிய எமக்கு பேரா­பத்தை தரக் கூடி­ய­தா­கவே உள்­ளது என்­பது சர்வ நிச்­சயம். இந்த சந்­தர்ப்­பத்தில் நாமும் நமது தலை­மை­களும் சற்று நிதா­னித்து சாமர்த்­தி­ய­மா­கவே காய் நகர்த்த வேண்­டி­யுள்­ளது.

இதை­வி­டுத்து நாம் கூச்சல் போட்டுக் கொண்டும் கூக்­குரல் விடுத்துக் கொண்டும் இருப்­ப­தா­னது நமது கைக­ளி­னா­லேயே நமது கண்­களைக் குத்திக் கொள்­வ­தற்கு ஒப்­பா­னது.

கடந்த சில தினங்­க­ளாக நாட்டில் நடை­பெறும் சம்­ப­வங்கள், அசம்­பா­வி­தங்கள் முஸ்­லிம்­களைச் சீண்­டிப்­பார்ப்­ப­தா­கவும் அவர்­களை கல­வர நோக்கில் இழுத்­தெ­டுப்புச் செய்­வ­தா­கவும் அமைந்­துள்­ளது. சில திட்­ட­மிட்ட பௌத்த அமைப்­புகள் இந்த பணியை கனக்­கச்­சி­த­மா­கவே நிறை­வேற்றி வரு­கின்­றன.

நாட்டில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் பௌத்­த­மத இன­வாத குழுக்கள் தற்­போது தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளன. இவர்­களின் பின்னால் சில நச்சுப் பாம்­பு­களும்  (முன்னாள் இன­வா­திகள்) சில நல்ல பாம்­பு­களும் (இன்னாள் புதிய இன­வா­தி­களும்) கைகோர்த்­துள்­ளனர். முஸ்லிம் சமூ­கத்தை நோக்கி இன­வாத மத­வாத கருத்­துக்­களைக் கட்­ட­விழ்த்து விடு­வ­தி­னூ­டாக பாரி­ய­தொரு கல­வ­ரத்தை உண்டு பண்ணி பௌத்த மக்­களை ஒன்று திரட்டும் செயற்­றிட்­டத்தை செய்து வரு­கின்­றனர்.

யாழப்பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் துப்­பாக்கிச் சூடு, அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்­ஸவின் ஆக்­ரோ­ச­மான கருத்­துக்கள், பெபி­லியான பெசன் பக் விபத்து, டான் பிர­சாத்தின் இன­வாதப் பேச்­சுக்கள், என்­பன அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக நடந்­தே­றி­னாலும் இவை­ய­னைத்தும் ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நிர­லுக்­கான திகி­டு­தத்­தங்­க­ளா­கவே இருப்­பதை கோடிட்டுக் காட்­டு­கின்­றது.

தற்­போது நாட்டில் இரண்டு பிர­தான அர­சியல் சக்­தி­க­ளுக்­கி­டை­யிலும் சிங்­கள பௌத்த அமைப்­பு­க­ளுக்­கி­டை­யிலும் தோன்­றி­யி­ருக்கும் பௌத்த உணர்­வெ­ழுச்சிப் போராட்டம், யாருக்கு அதிக பலம் என்ற கோதாவில் ஒன்றை ஒன்று விழுங்கி விடும் போலுள்­ளது. எனவே வரும் நாட்­களில் இன-­மத வெறுப்­பு­ணர்ச்­சியை தூண்டும் செயற்­பா­டுகள் உக்­கி­ர­ம­டைய வாய்ப்­புள்­ளது.

கடந்த 2014, 2015 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யினைப் போன்று சிறு­பான்­மை­யினர் சந்­தித்த இக்­கட்­டான நிலை­யினை விட தற்­போ­தைய சூழ்­நி­லையை படு­ப­யங்­க­ர­மா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

யார் எதிரி? யார் நண்பன்? என்று அன்­றைய ஆட்­சியில் ஓர­ள­வேனும் அளந்து கொள்ளக் கூடி­யதாய் இருந்­தது. ஆனால் தற்­போது ஆட்­சியை தக்க வைத்துக் கொள்ள, பௌத்த மதத்­தினை திருப்திப் படுத்தும் நோக்­கி­லான ஆளும் அர­சாங்­கமும் இன­வா­தத்தை முழு வீச்சில் முடுக்கி விட்டு ஆட்­சியை எட்டிப் பிடிக்கும் நோக்­கி­லான இன்­னொரு தரப்பும் இரு முனைப் போட்­டியில் இறங்­கி­யுள்­ளன.

இவ்­வே­ளையில் நாம் அர­சாங்­கத்தை பகி­ரங்­க­மாக விமர்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தா­னது அவ்­வ­ளவு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இன­வா­தத்தை தூசு­தட்டி சூடேற்­று­வ­தி­னூ­டாக ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த நினைக்கும் சக்­தி­களை தவி­டு­பொ­டி­யாக்க வேண்­டு­மெனில் இன­வாதத்தை கக்­கு­கின்ற பௌத்த அமைப்­பு­களை கண்டும் காணாமல் விடு­வதும் எதனைச் செய்­தாலும் இந்த அரசு சட்ட நட­வ­டிக்கை எடுத்தால் அது இன­வா­தி­களை நோக்­காது பௌத்த மதத்­திற்கு ஏற்­பட்ட இழுக்கு என்று பௌத்த மக்கள் ஆட்­சிக்கு ஆப்­பாக மாறி­வி­டு­வார்கள் என்ற நோக்­க­முமே அர­சாங்கம் இவ்­வி­ட­யத்தில் அச­மந்தப் போக்கை கடைப்­பி­டித்து வரு­வ­தற்­கான கார­ணங்­க­ளாகும். 

இந்த இன­வாத அலை­வ­ரி­சை­யா­னது அர­சியல் சூழ­லுக்கு ஏற்ப மேலும் கீழு­மாக கூடிக்­கு­றை­கின்­ற­தொ­ழிய அதன் பண்பில் மாற்றம் நிகழ்­வ­தற்­கான சமிக்­ஞைகள் தென்­ப­ட­வில்லை. இதனால் முஸ்­லிம்கள் வீதி­க­ளிலும், பொது இடங்­க­ளிலும் அதில் மாற்­றத்தை  ஏற்­ப­டுத்த போகிறேன், இதில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த போகிறேன் என்று சிங்­கள மக்­களின் சீற்­றத்தை தூண்­டாமல் இருப்­பது இப்­போ­தைக்கு நல்­லது. இங்கே அடங்கி ஒடுங்கி போக வேண்டும் என்று நாம் கூற­வில்லை. ஆமை வேகத்தில் நகர்ந்து எமது இலக்கை எட்டிப் பிடிக்க வேண்டும் என்­கிறோம்.

எமது அர­சியல் தலை­மைகள் அசம்­பா­விதம், வன்­முறை நடக்­கின்ற இடங்­க­ளுக்கும், பத்­தி­ரி­கையில் முத­லா­வது அறிக்கை விடு­வ­திலும் நீயா? நானா? முதலில் பார்த்து விடலாம் என்ற வழ­மை­யான நிகழ்ச்சி நிர­லிலே செயற்­ப­டு­கின்­றார்கள். இது தொடர்­பாக காத்­தி­ர­மான பணிகள் எதை­யா­வது உருப்­ப­டி­யாக செய்­கின்­றார்­களா? அல்­லது இன்னும் பாரா­ளு­மன்­றத்தில் பல் குத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்­களா? என்­பது புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

எனவே, இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அர­சியல் தலை­மை­களை கண் கண்ட தெய்­வ­மாக பார்ப்­ப­தை­வி­டுத்து முதலில் எமக்குள் இருக்­கின்ற பகை­மை­களைக் களைந்து நாம் ஒன்று சேர வேண்டும். தூய்­மை­யான இஸ்லாம் மார்க்­கத்தை தூற்றிப் பேசு­ம­ள­வுக்கு நாம் ஒவ்­வொரு இயக்­கங்­க­ளாக, ஜமாஅத்களாக பிரிந்து எங்­களின் பலங்­களைக் குறைத்துக் காட்­டு­கின்றோம்.

அன்று பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஸ முஸ்­லிம்­க­ளுக்குள் இயக்க வேறு­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளன என்­று­மில்­லா­த­வாறு தற்­போது அவை­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் முற்றிப் போயுள்­ளன. சிறி­யதும் பெரி­ய­து­மாக 15 சம்­ப­வங்கள் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன என்று கூறு­ம­ள­வுக்கு இருப்­பதை நினைத்து நாம் வெட்­கப்­பட வேண்டும். முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் முன்­னெப்­போதும் இல்­லா­த­ளவு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இன­வாத தீப்­பொ­றிக்குள் கல­வரம் ஏற்­படின் முஸ்­லிம்­க­ளுக்­கான உத­விகள் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து பொலிஸ் நிலையம் வரைக்கும் அனைத்தும் அஸ்­த­ம­ன­மா­கி­விடும். நீண்ட நோக்­கினை இலக்காகக் கொண்டு சிவில் அமைப்­புகள் திட்­ட­மிட்ட பொறி­மு­றை­யொன்றைக் கொண்ட நிகழ்ச்சி நிரலை தயா­ரித்து செயற்­பட வேண்டும்.

பெரும்­பான்மை பௌத்­தர்கள் வாழும் பிர­தே­சங்­களில் இருக்­கின்ற முஸ்­லிம்கள் நீண்ட நிலைத்­தி­ருத்­தலின் அடிப்­ப­டையில் நிதா­ன­மாகச் செயற்­பட வேண்டும். கல­வரம் வெடிக்கும் நிலை ஏற்­படின் முத­லா­வது வரை­ப­ட­மாக கையில் எடுக்­கப்­ப­டு­வது மேல்,தென் மாகா­ணங்­களே. எனவே மேற்­படி மாகா­ணங்­களில் வாழு­கின்ற சிறு­பான்மை மக்கள் எப்­போதும் சுதா­க­ரித்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரும்­பான்­மை­யி­னரின் வியா­பார நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில் கடை­களை, விற்­பனை நிலை­யங்­களை, வியா­பாரஸ் தலங்களை வைத்­தி­ருக்கும் முஸ்­லிம்கள் வருமுன் காப்­பதே சிறந்­தது.

அதே போன்று முஸ்லிம் இளை­ஞர்கள் பாதை­யோ­ரங்­களில் நின்று கூட்­ட­மாகக் கதைத்துக் கொண்­டி­ருப்­பது, பொது இடங்­களில் குழுக்­க­ளாக நட­மா­டு­வது, இரவு நேரங்­களில் பாது­காப்­பில்­லாமல் சுற்­று­வது, உணர்ச்­சி­களைக் கொண்டு கிளர்ச்சியூட்டும் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது போன்­ற­வற்­றி­லி­ருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் முகநூல், இணை­யத்­த­ளங்கள் மூல­மாக இன­வாத கருத்­துக்­களை செய்­தி­க­ளா­கவோ, கருத்துப் பதிவுகளாகவோ இடுகின்றவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியதற்கமைய அவரது செயலாளரினால் தொழிநுட்பக் குழுவொன்று முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

எனவே இணையத்தளங்கள், முகநூல், மற்றும் இனவாதிகளை தூற்றும் காரசாரமான கருத்துக்கள், ஒளிப்பதிவுகள் என்பவற்றை பதிவேற்றம் செய்யாமல் இருப்பது பொருத்தமாகும்.

எனவே முஸ்லிம்கள் நாடு நகர்கின்ற போக்குகளை அவதானித்து லாவகமாக செயற்பட வேண்டுமேயொழிய நாமும் வலிந்துபோய் மாட்டிக் கொள்ளக்கூடாது.எதிர் வரும் காலங்களில் இனவாதத்தை தூண்டும் பேச்சுக்களும், அசம்பாவிதங்களும் நடைபெறுகின்ற பொழுது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நமது நிதானத்தை இழந்து விடக் கூடாது.

1 comment:

  1. காலத்தின் தேவை அரிந்து நடந்து கொள்ளவேன்டும் இனவாதக்குலுக்கலை அரிந்து சாதாரன மக்களுடன் நள்ளினக்கம் பேனிநடப்போமானால் மக்களே இப்படியானவர்களுக்கு
    பதில் அளிப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.