Header Ads



அர்ஜுன் மகேந்திரன், இன்று நாடு திரும்பினார் - குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார்

சிங்கப்பூர் சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அர்ஜூன் மகேந்திரன் கோப் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
இதனை நாடாளுமன்ற அமர்வின்போது இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி விட்டார் அர்ஜூன்” என கூட்டு எதிர்க்கட்சியினர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சரியாக ஒருவாரம் கழித்து இன்று அர்ஜுன் மகேந்திரன் நாடு திரும்பினார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே இவர் சிங்கப்பூர் சென்றிருந்தார் எனவும், அவர் தன்னிடம் கூறிவிட்டே சென்றதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைவரிடமும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
கூட்டு எதிர்க்கட்சி மட்டுமல்லாது தன் மீது குற்றம் சுமத்தியுள்ள அனைவருக்கும் அர்ஜூன் பதிலளித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் “என் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் நான் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன்” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல், தொடர்பான அறிக்கையை கடந்த மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கோப் குழு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இதில் நேரடியாக பொறுப்பு கூறவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதேவேளை, மஹரகமயில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய வங்கியின் முறி விற்பனை முறைக்கேடு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பிய இதே சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.