Header Ads



முஸ்லிம்களுக்கும், ஹிலாரிக்கும் துப்பாக்கி விற்பனை கிடையாது


முஸ்லிம்களுக்கும், அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களுக்கும் துப்பாக்கி விற்பனை கிடையாது என்று அந்த நாட்டின் துப்பாக்கி விற்பனையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஜாக்ஸன் சென்டரில் பால் சாண்ட்லர் என்பவர் துப்பாக்கி விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.
அந்த நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அவரது விற்பனையகத்தின் வாயிலில், "முஸ்லிம்களுக்கும், ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஆவதை ஆதரிப்பவர்களுக்கும் விற்பனை கிடையாது' என்று எழுதி வைத்துள்ளார்.
மேலும், உள்ளூர் நாளிதழில் அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்திலும், "நீங்கள் முஸ்லீம், அல்லது ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளரா? மன்னிக்கவும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விற்பதை பாதுகாப்பற்றதாகக் கருதுகிறோம்' என்று பால் சாண்ட்லர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளன.
இதுகுறித்து பால் சாண்ட்லர் கூறியதாவது: அமெரிக்கர்கள் ஆயுதம் வைத்திருப்பதை ஹிலாரி கிளிண்டன் விரும்பவில்லை. அவர் ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களிடமிருந்து ஆயுதங்களை பறித்து விடுவார். எனவே, அவர் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை.
முஸ்லிம்கள் அமெரிக்காவையும், அமெரிக்கர்களின் வாழ்வியல் முறையையும் பாழ்படுத்த விரும்புகிறார்கள். எனவே அவர்களையும் எனக்குப் பிடிக்காது.
எனவே, கிளிண்டன் ஆதரவாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆயுதம் விற்பனை செய்ய மறுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்றார் அவர்.
அமெரிக்கச் சட்டப்படி, பொதுச் சேவைகளை அளிப்பதில் மதரீதியிலான பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்தச் சட்டம் துப்பாக்கி விற்பனைக்குப் பொருந்துமா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
ஏற்கெனவே, ஃபுளோரிடா மாகாணத்தில் "முஸ்லிம்கள் தடை செய்யப்பட்ட பகுதி' என்று அறிவிக்கப்பட்ட விற்பனையகம் மீது அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அங்குள்ள ஸ்கூல் பிள்ளைகளுக்கு துப்பாக்கிய விற்றால் பயங்கர வாதம் ஒழிந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.