Header Ads



கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம், சிறிலங்காவுக்கு மின்சாரம் – இந்தியா ஆலோசனை

சிறிலங்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் வகையில் கடலுக்கு அடியில் மின்சார பரிமாற்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்ய 500 மெகாவாட்  மின்சாரத்தை இந்தியாவிடம் கோரியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது, துணை-கடல் சக்தி இணைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி-

“தற்போது நாம் பங்களாதேஸ், நேபாளம், மியான்மார், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்கிறோம்.

கடலுக்கடியிலான மின் இணைப்பு கட்டமைப்பின் மூலம் சிறிலங்காவுக்கும் மின்சார விநியோகத்தை மேற்கொள்வது குறித்து தற்போது ஆலோசிக்கிறோம்.

இன்னமும் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், நாம்  துணை – கடல் இணைப்பு தொடர்பான புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளோம்.

சிறிலங்காவுக்கு மின்சார விநியோகம் செய்வது குறித்து முன்னர் இந்தியா ஆலோசனை நடத்தியது, ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் திட்டம் சாத்தியமானதாக இருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.

அப்போது நல்ல தொழில்நுட்பம் இருக்கவில்லை. அது செலவுமிக்கதாகவும் இருந்தது.

இப்போது தொழில்நுட்பம் பெருமளவில் உயர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க சக்தியை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

எனவே சிறிலங்காவுக்காக இதனை நாம் மீளப் பரிசீலிக்கிறோம். கடலுக்கடியில் மின் இணைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்று ஆராய்கிறோம்.

இது நல்ல தொழில்நுட்பம் மாத்திரமன்றி செலவும் குறைவானது.” என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.