Header Ads



'பேஸ்புக் தோழியை சந்திக்க பர்தா அணிந்துசென்றவரை, பயங்கரவாதி என நினைத்து பிடித்த மக்கள்'


ஈரோடு அருகே ‘முகநூல்’ தோழியை சந்திக்க பர்தா அணிந்து சென்ற என்ஜினீயரை, பயங்கரவாதி என நினைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதி

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மெயின் ரோட்டில் நேற்று மாலை பர்தா அணிந்து கொண்டு ஒருவர் செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் பர்தா அணிந்திருப்பவர் ஆண் குரலில் பேசுகிறாரே என்று சந்தேகம் அடைந்தனர்.

ஒரு வேளை ஐ.எஸ். தீவிரவாதி யாராவது இந்த பகுதியில் நாசவேலை செய்ய இங்கு வந்திருக்கிறாரோ என்று சந்தேகம் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள் அந்த நபரை பிடித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முகநூல் தோழி

விசாரணையில், ‘அவர் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அகமது கபீர் (வயது 25) என்ஜினீயர் என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவரும் முகநூல் மூலம் அறிமுகமாகினர். இதைத்தொடர்ந்து 2 பேரும் தங்கள் நட்பை முகநூல் மூலம் தினமும் வளர்த்துக்கொண்டனர். மேலும் அந்த பெண் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அவரிடம் கூறி உள்ளார்.

இந்த நிலையில் பவானியில் உள்ள தன்னுடைய முகநூல் தோழியை பார்க்க கும்பகோணத்தில் இருந்து அகமது கபீர் நேற்று காலை புறப்பட்டார். இதுகுறித்து அவர் தன் முகநூல் தோழியிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். உடனே அகமது கபீரிடம் அந்த பெண் கூறுகையில், ‘தன்னை பார்க்க பவானி வரவேண்டாம். கவுந்தப்பாடியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டுக்கு வரவேண்டும்’ என்று கூறினார்.

பர்தா அணிந்து கொண்டு...

இதைத்தொடர்ந்து அவர் கவுந்தப்பாடி வந்து, தன்னுடைய முகநூல் தோழியின் வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு கும்பகோணம் செல்வதற்காக அங்கிருந்து அகமது கபீர் புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகில் ஏராளமான ஆட்கள் நின்று பேசிக்கொண்டு இருந்ததால் அகமது கபீரை அங்கிருந்து அந்த பெண் அனுப்ப தயங்கினார்.

பின்னர் அந்த பெண் தன்னிடம் இருந்த பர்தாவை அகமது கபீரிடம் கொடுத்து இதை அணிந்து கொண்டு கவுந்தப்பாடி பஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பர்தாவை அணிந்து கொண்டு அகமது கபீர் சென்று உள்ளார்.

திருமணம் ஆனவர்

ஆனால் அவர் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழி தெரியாமல் வழிதவறி சென்று விட்டார். இதனால் அவர் செல்போன் மூலம் தன் முகநூல் தோழியை தொடர்பு கொண்டு வழி தவறி சென்றுவிட்டது குறித்து தெரிவித்தார். பர்தா அணிந்து கொண்டு ஆண் குரலில் பேசியதால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஐ.எஸ். தீவிரவாதி என நினைத்து அவரை பிடித்துள்ளனர்’ மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும், இதை மறைத்து தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி அகமது கபீரை ஏமாற்றி கவுந்தப்பாடிக்கு வர சொல்லியதும்’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அகமது கபீரை, கவுந்தப்பாடி போலீசார் எச்சரித்து கும்பகோணத்துக்கு அனுப்பிவைத்தனர்.

1 comment:

  1. A real embarrassment. Only the Islamic life will give you the victory and contentment, not the disguise.

    ReplyDelete

Powered by Blogger.