Header Ads



கோத்தபாய ராஜபக்சவை, உத்தமராக நோக்கும் உதய கம்மன்பில


கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரை விட அதிகளவான வருமானத்தை அவன்கார்ட் நிறுவனம் அரசாங்கத்திற்கு உழைத்து கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -01- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஊடாக ஆயிரத்து 140 கோடி ரூபாவை முறைகேடாக சம்பாதித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கே இன்று சகல ஊடகங்களிலும் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

இந்த ஊடகங்களுக்கு தலைப்பு எப்படி திடீரென வந்தது?. உண்மையில் அவன்கார்ட் நிறுவனம் மூலம் என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு முன்வைப்பது கடமை.

விசேடமாக கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யும் சம்பவம் நடந்துள்ளது. இன்று மதியமே கோத்தபாய நாடு திரும்பினார்.

2006ஆம் ஆண்டில் இருந்து தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல் பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் எப்படி உருவாகினர் என்பதும், அதற்கு தீர்வாக வர்த்தக கப்பல்கள் கடல் பாதுகாப்பை பெற்றுக்கொண்ட விதமும் முழு நாடும் அறியும்.

கடற்கொள்ளையர்களிடம் இருந்து வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கவே அவன்கார்ட் என்ற தனியார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

கோத்தபாய ராஜபக்ச மீதான வழக்கு நீண்டகால நோக்கத்தை கொண்டது. 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நினைத்து, அவரை மோசடி வழக்கில் சிக்கவைத்து அழிக்க முயற்சித்துள்ளனர்.

கோத்தபாய மீது அரசாங்கத்திற்கு அதிசயமான பயம் உள்ளது. இந்த பயம் நியாயமானது. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை ஆச்சரியப்படும் வகையில் நிறைவேற்றினார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்ததே அந்த பொறுப்பு. நகரத்தை அலங்கரித்தமை, பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று நான் நம்பிய போதிலும் கொழும்பில் உள்ள குப்பைகளை இல்லாமல் செய்ய முயும் என நம்பவில்லை.

சுற்றுலாப் பயணிகள் உலகில் அழகான நகரமாக 2013ஆம் ஆண்டு கொழும்பு நகரை தெரிவு செய்தனர்.

கோத்தபாய ராஜபக்ச 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், வெட்டினாலும் பச்சை நிறம் என்று கூறுபவர்களும் அவருக்கு வாக்களிப்பார்கள்.

இதன் காரணமாக அவருக்கு அஞ்சி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். கோத்தபாய அரசியலுக்கு வர விரும்பாதது, நாடு எதிர்நோக்கும் துரதிஷ்டம்.

ஆனால், இப்படி சேறுபூசி, அடக்க நினைத்தால், அவர் அரசியலை நோக்கி தள்ளப்படலாம். 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் நாங்கள் வலியுறுத்தினோம், ஆனால் அவர் அதனை விரும்பவில்லை.

அரசியலை கோத்தபாய வெறுக்கின்றார். எங்களால் முடியாது போனதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஜோடி இணைந்து செய்து முடிப்பார்கள் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.