Header Ads



மக்கள் வங்கியில் 70 கோடி ரூபா நிதிமோசடி - ரணிலிடம் செல்வதைத் தடுக்க முயற்சி


மக்கள் வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் மவ்பிம பத்திரிகை இன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் வங்கியின் டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்தின் ஊடாக 70 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக மவ்பிம பத்திரிக்கை தெரிவிக்கின்றது.

இந்த மோசடி தொடர்பான தகவல்கள் பிரதமரிடம் செல்வதை தடுக்கும் வகையில் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இருவரினால் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையின் எந்தவொரு உறுப்பினரும் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவலையோ ஆவணங்களையோ வழங்கவில்லை என்பதுடன் தற்போது வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் சத்தியக்கடதாசி பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டு வரையான வருமானத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளடக்கப்படவில்லை என மவ்பிம பத்திரிக்கையுடனான செவ்வியில் முன்னாள் சிரேஷ்ட வங்கியாளரான ருசிருபால தென்னகோன் சுட்டிக்காட்டுகின்றார்.

சர்ச்சையானவொரு நிலைமை தோன்றியுள்ளதை அடுத்து திட்டத்திற்கு தேவையான வன்பொருளை கொள்வனவு செய்யும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சபை கூறிய போதிலும், மென்பொருளை கொள்வனவு செய்வதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தென்னகோன் குறிப்பிடுகின்றார்.

விலை மனு கோரலின்றி முன்னெடுக்கப்பட்ட இந்த கொடுக்கல் வாங்கலின் பொறுப்பை ஏற்று மக்கள் வங்கியின் முழு பணிப்பாளர் சபையும் பதவி விலக வேண்டும் என ருசிருபால தென்னகோன் மவ்பிம பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.