சர்வதேச இஸ்லாமிய மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பம் - முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்பு
- விடிவெள்ளி ARA.Fareel-
உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
‘முஸ்லிம்களும் சகவாழ்வுக்கான எதிர்பார்ப்புகளும்’ எனும் தலைப்பில் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரதம அதிதியாக ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று காலை அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்படும் இம் மாநாடு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், நாளை காலை 9 மணிமுதல் 11 மணிவரையும் பின்பு ஜும்ஆ தொழுகையையடுத்து 3 மணிமுதல் 6 மணிவரையும் கொழும்பு விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவரும் முன்னாள் கொழும்பு மேயரும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதருமான எம்.ஹுசைன் மொஹமட் மேற்கொண்டுள்ளார்.
சவூதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, பிலிப்பைன், இந்தியா, தாய்வான், நேபாளம், கம்போடியா, மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கைப் பிரதிநிதிகளும் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
உலக இஸ்லாமிய லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி அப்துல்லா பின் அப்துல் முஹ்ஸின் அல் துர்க்கி இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்தடைந்துள்ளார்.
விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் அமர்வுகளில் மாற்று மதத்தலைவர்களும் உரையாற்றவுள்ளனர்.
சீனாவின் பௌத்த சம்மேளனத்தின் உதவித் தலைவர் சூசாங் தேரர், இந்தியா கேரளாவைச் சேர்ந்த கலாநிதி அப்துல் சலாம் எமாயக்கர் அஹமட், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலகே சுமணசிறி தேரர், தாய்லாந்து பட்டானி பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி இஸ்மாயில் லுப்தி ஜவாகியா, கலாநிதி வர்மா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
மற்றும் பங்களாதேஷ் ஐம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் பேராசிரியர் அப்தெல்மான் அபுசத்தார் மொஹமட் மற்றும் கேரளா மேல் நீதிமன்ற நீதிபதி பி.கே.சம்சுதீன், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கலாநிதி அப்துல் கைர் டராசன், இலங்கையைச் சேர்ந்த கலாநிதி பச்சமல அபித் ஹுசைன்மியா ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி அல்துர்க்கியும் உரைநிகழ்த்தவுள்ள அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மாநாட்டில் ஆய்வறிக்கையொன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளார். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும் மாநாட்டில் கலந்துகொள்வார்.
மேலும் ஹரவிந்தர் சிங் சர்மா, கலாநிதி எம்.மஸாஹர் செய்யத் மொஹமட், கலாநிதி டக் குங்சான், கலாநிதி மொஹமட் ருவைஸ் ஹனிபா, கலாநிதி சாந்திலால் கே.சோமையா, அஷ்ஷெய்க் அகார் மொஹமட், கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் உட்பட மேலும் பலர் உரையாற்றவுள்ளனர்.
Post a Comment