நீதிமன்றம் உத்தரவிட்டும், நாமல் கைது செய்யப்படாதது ஏன்..?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒன்பது நாட்கள் கடந்துள்ளன.
அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து, பங்குச் சந்தையில் சந்தேகத்திற்கு இடமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 பேரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளன. எனினும் இதுவரையில் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு நீதிமன்றம் இந்த கைது உத்தரவினை பிறப்பித்திருந்தது.
என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர் ஏ கொப்ரட் சேர்விஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாமல் ராஜபக்ச, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களான சட்டத்தரணி இந்திக்க பிரபாத் கருணாஜீவ, சேனானி சமரநாயக்க, சுதர்சன பண்டார கனேகொட, பவித்ரா சுஜானி பொகொல்லாகம மற்றும் இரேசா சில்வா ஆகியோர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச, சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைக் கொண்டு பங்குச் சந்தையில் ஊழல் செய்துள்ளதாக “ஊழல் ஒழிப்பு குரல்” என்ற அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment