Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு கண்டனம்

மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித், முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி வெளிநடப்பு செய்தன. 

குஜராத்தின் உனா மாவட்டத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி தலித் இளைஞர்களை பசு ஆர்வலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவமும், மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இரு பெண்களைத் தாக்கிய சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மக்களவை நேற்று கூடியதும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்த சம்பவங்களைத் தடுக்காமல் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். 

பூஜ்ய நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: 

மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பசு பாதுகாப்பு சங்கத்தினர் தங்களுக்கென தனி சட்டத்தை உருவாக்கி தலித்துகளை தாக்கி வருகின்றனர். 

பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கப்படுகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. பசு பாதுகாப்பு சங்கம் போன்ற அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். 

மத்தியப் பிரதேசத்தில் எருமை இறைச்சியை கொண்டு சென்ற இரு பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். எருமை இறைச்சியை வாங்கிய தற்கான ரசீதை அவர்கள் காண்பித்த பிறகும், அது பசுவின் இறைச்சி தான் என கூறி போலீஸார் முன்னிலையிலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 

மேலும் ஆண்கள் மாட்டிறைச்சியை கொண்டு வந்திருந்தால் கொலை செய்திருப்போம் என அந்த அப்பாவி பெண்களை மிரட்டியுள்ளனர். தடயவியல் அறிக்கையும், அவர்கள் கொண்டு சென்றது எருமையின் இறைச்சி என்று நிரூபித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இத் தகைய சம்பவங்கள் அதிகரித்துள் ளன. இவ்வாறு அவர் பேசினார். 

(த ஹிந்து)

No comments

Powered by Blogger.