Header Ads



டொனால்ட் டிரம்பின் மனதை தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள தீய நச்சுகளை அழிக்க கிரீன் டீ..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் மனதைத் தூய்மைப்படுத்த கிரீன் டீ பாக்கெட்டுகளை இந்திய நிறுவனம் ஒன்று இலவசமாக அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது. டிரம்ப் மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார். 

இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த தேயிலை தயாரிப்பு நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் மனதைத் தூய்மைப்படுத்த கிரீன் டீ பாக்கெட்டுகளை இலவசமாக அனுப்பியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம் டிரம்ப்... நாங்கள் சுத்தமான கிரீன் டீ பாக்கெட்டுகளை உங்களுக்கு அனுப்பியுள்ளோம். கிரீன் டீ உடலில் உள்ள தீய நச்சுகளை அழிக்கவல்லது. 

மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தி ஆரோக்கியத்தை திரும்ப பெற, கிரீன் டீ உதவுகிறது. மேலும் இது மனிதர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது. உங்கள் நலனுக்காகவும், அமெரிக்காவின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காகவும் கிரீன் டீயை அருந்துங்கள். உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான காலம் கடந்துவிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிறுவனம் “டொனால்ட் டிரம்பினால் மொத்த உலகமும் கவலை அடைந்துள்ளது. நம்மால் அவரை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் மாற்ற முடியும். தேவை என்றால் எவ்வளவு தேயிலையும் அனுப்ப தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. 

சில நாட்களுக்கு முன், 4 ஆண்டுகளுக்கு தேவையான கிரீன் டீ பாக்கெட்களை, நியூயார்க்கில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் கொல்கத்தா தேயிலை நிறுவனத்தின் பிரதிநிதிகள் சேர்ப்பித்தனர்.

No comments

Powered by Blogger.