Header Ads



துருக்கிய இராணுவ, ஆட்சிக் கவிழ்ப்பின் மறுபக்கம்

-khaibarthalam-

துருக்கிய வரலாறு, ஆட்சிக்கவிழ்ப்புகளை மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிகளை நிறையவே கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அதுபோன்றவொரு சம்பவம் நடந்திருக்கவில்லை.

1960, 1971 மற்றும் 1980-இல், பெரும்பாலும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கிரீஸ், இந்தோனேஷியா மற்றும் ஏனைய இடங்களில் நடந்ததைப் போலவே, அதேகாலக்கட்டத்தில் பெண்டகன் மற்றும் சி.ஐ.ஏ .-இன் நெருக்கமான ஆதரவுடன், இராணுவம் துருக்கியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

துருக்கி போன்றவொரு நாட்டில் இராணுவத்தின் மிகப்பெரும் பிரிவுகளால் மீண்டுமொருமுறை அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தால், துருக்கியில் மட்டுமல்ல, மாறாக உலகளவில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளின் காலக்கட்டம் திரும்பியுள்ளது என்பதே அதிலிருந்து கிடைக்கும் தவிர்க்கமுடியாத முடிவாக இருக்கும்.

சமூக சமத்துவமின்மையின் முன்னொருபோதும் இல்லாத மட்டங்கள் மற்றும் கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களுக்கு இடையே, மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் ஏனைய இடங்களிலும் இருபத்தைந்து ஆண்டு கால அமெரிக்க தலைமையிலான போர்களால் எரியூட்டப்பட்ட அதீத வன்முறை, ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடியானது ஐரோப்பாவின் பிரதான முதலாளித்துவ மையங்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூமி எங்கிலும் இப்போது தவிர்க்க முடியாமல் பரவி வருகிறது. துருக்கியின் தொழிலாளர்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு, “இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது,” என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு சென்றார்.

எர்டோகன் அவரே கூட இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அவரது இப்போதைய எதிரியும் முன்னாள் கூட்டாளியுமான, நாட்டைவிட்டு வெளியேறி பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருபவரும், வெளிப்படையாகவே அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பை அனுபவித்து வருபவருமான அமெரிக்க-ஆதரவிலான இஸ்லாமிய மதகுருமார் பெத்துல்லா கூலன் (Fethullah Gற்len) மீதும் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் மீதும் சாட்டினார்.

எர்டோகன், கூலன் மீது குற்றஞ்சாட்டுகையில், அவர் உண்மையில் ஒபாமாவைக் குறித்து தான் பேசுகிறார் என்று போதுமானளவிற்கு நிச்சயமாக கூறலாம். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த செய்திக்கு வாஷிங்டனின் ஆரம்ப விடையிறுப்பு ஆகக்குறைந்தது பல அர்த்தங்களை கொண்டிருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி "துருக்கியினுள் ஸ்திரத்தன்மை, சமாதானம் தொடர வேண்டுமென" அமெரிக்கா விரும்புவதாக மட்டுமே கூறியிருந்தார். ஆனால் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து வருவது வெளிப்படையாக ஆனதும் வெள்ளை மாளிகை "ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கி அரசாங்கத்திற்கு" ஆதரவை எடுத்துரைத்து ஓர் அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பது குறித்த ஐயப்பாட்டை சாதாரணமாக உதாசீனப்படுத்திவிட முடியாது.

வெறுமனே மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான், ஒபாமா நிர்வாகம் எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹம்மத் முர்சி தூக்கியெறியப்பட்டதை ஓர் "ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக" அழைக்க மறுத்து, தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி தலைமையிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏறத்தாழ முழுமையாக பகிரங்க ஆதரவு வழங்கி இருந்தது.

சிசி ஆட்சி அவரது எதிர்ப்பாளர்களை சிறையிலடைத்து, சித்திரவதை செய்து படுகொலை செய்து வந்த நிலையிலும், வாஷிங்டன் அதற்கு தொடர்ந்து இராணுவ உதவிகளைப் பாய்ச்சியது. பின்னர், 2014 இல், ஜேர்மனியுடன் சேர்ந்து, அது உக்ரேன் அரசாங்கத்தை வெளியேற்ற பாசிச-தாக்குமுகப்புடன் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வடிவமைத்தது. சிரியாவில் ஐந்தாண்டு கால உள்நாட்டு போர் சம்பந்தமாக வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையிலான பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன,

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா-முடுக்கிவிட்ட அப்போரில் பினாமி படைகளாக சேவையாற்றி வரும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எர்டோகன் அரசாங்கம் ஒரு முக்கிய ஆதரவாளராக இதுவரையில் செயல்பட்டுள்ளது. அதேவேளையில் சிரிய குர்திஷ் படைகளுடன் வாஷிங்டன் நெருக்கமாக இணங்கி இருப்பதை அன்காரா அதிகரித்த கோபத்துடன் பார்க்கிறது. சிரியாவில் குர்தியர்களின் இராணுவ வெற்றிகள் துருக்கிக்கு உள்ளேயே குர்திஷ் தன்னாட்சிக்கான கோர்க்கைகளைப் பலப்படுத்துமென அது அஞ்சுகிறது.

அண்டையில் நடக்கும் போரால் துருக்கி முன்பினும் அதிகமாக அரசியல் மற்றும் பொருளாதார விலைகளை கொடுக்க வேண்டியிருக்கின்ற நிலையில், ஒரு ரஷ்ய போர்விமானத்தைத் துருக்கி நவம்பர் 2015 இல் பதுங்கி இருந்து சுட்டுவீழ்த்தியதற்காக கடந்த மாதம் எர்டோகன் ரஷ்யாவிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ரஷ்யா உடன் முயற்சிக்கப்பட்ட சமரசம், அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி சிரியாவுடன் ஓர் அரசியல் ஏற்பாடு செய்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. அமெரிக்கா, ஐரோப்பாவில் அதன் அணுஆயுதங்களுக்கான மிகப்பெரிய கிடங்குகளைக் கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இன்செர்லிக் (Incirlik) விமான தளத்தை அணுகும் உரிமையை அமெரிக்க போர்விமானங்களுக்கு பதிலாக, ரஷ்ய போர்விமானங்களுக்கு வழங்க எர்டோகன் அச்சுறுத்தி உள்ளார் என்றும் கூட அங்கே செய்திகள் உள்ளன.

அத்தளத்தின் துருக்கிய தளபதி இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தலைவரென்றும், இப்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையே பதட்டங்கள் அதிகரிப்பதை குறித்து பிரிட்டிஷ்Telegraph நாளிதழ் விவரித்திருந்தது: “இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக இந்த மாதத்தில் திரு. எர்டோகன் திடீரென ஒரு அதிரடியான இராஜாங்க புரட்சியை தொடங்கினார்.

துரிதமான வெற்றியுடன், அவரது அரசாங்கம், ரஷ்யா, எகிப்து மற்றும் இஸ்ரேல் உடனான அதன் உறவுகளை செப்பனிட்டது. புட்டின், சிசி மற்றும் நெத்தன்யாஹூ ஐ படுகொலையாளர்கள் என்று திரு. எர்டோகன் விவரித்தமை இரவோடு இரவாக மறந்து போனது. பின்னர், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக, துருக்கியின் புதிய பிரதம மந்திரி சிரியா உடனான உறவுகளை மீளமைப்பதற்காக கூட பேசியிருந்தார்.” “அதேநேரத்தில், அமெரிக்கா உடனான உறவுகள் அதள பாதாளத்திற்குள் வீழ்ந்துள்ளது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடர்ந்து சிரியாவினுள் உள்ள ISIL க்கு எதிராக அவர்களது இன்செர்லிக் (Incirlik) விமானத் தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்களை, துருக்கியின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியில்" செலுத்தக்கூடாது என்பதையும் துருக்கிய அரசாங்கம் உள்ளடக்கிய போது, பெண்டகன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்னும் மோசமாக, அந்த இராணுவத் தளத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னர் அந்த துருக்கிய விமானத் தளத்தின் தளபதி கைது செய்யப்பட்டார், இது ஆட்சிகவிழ்ப்பாளர்கள் மற்றும் பெண்டகனுக்கு இடையே அவர் 'இடைதரகராக' இருந்தார் என்ற வதந்திகளை துருக்கியில் தூண்டியது. அச்செய்தி வெளிநாட்டில் தட்டிக்கழிக்கப்படலாம், ஆனால் அது திரு. எர்டோகனின் ஆதரவு தளம் எந்தளவிற்கு அதன் அமெரிக்க கூட்டாளியிடம் இருந்து அன்னியப்படுகிறது என்பதற்கு இதுவொரு அறிகுறியாகும்,” என்று குறிப்பிட்டது.

என்ன மாதிரியான முக்கியமான பதட்டங்களும் சூழ்ச்சிகளும் இந்த சம்பவங்களை உயர்த்தி இருந்தாலும், தெளிவாக முன்நிற்கும் கேள்வி இதுதான்: அரசியல் அரங்கில் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அச்சுறுத்தலை கொண்டிருக்கும் நேட்டோ அங்கத்துவ நாடு துருக்கி மட்டுந்தானா? சங்கிலி முதலில் அதன் பலவீனமான இணைப்பில் தான் உடையும், ஆனால் சங்கிலி முழுமையாக உடைகின்றது என்பதுடன், அச்சுறுத்தல் அனைவருக்குமாய் உள்ளது என்பதையே சமீபத்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

No comments

Powered by Blogger.