Header Ads



சாகிர் நாயக்குக்கு எதிரான, இந்திய அரசின் நகர்வுகள்

-லத்தீப் பாரூக்-

சுமார் இருபது வருடங்களுக்கு முன் துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் கல்ப் தினசரி பத்திரிகையில் நான் சவூதி அரேபியா பிராந்தியத்துக்கும் சேர்த்து பொறுப்பாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இஸ்லாமிய அறிஞர் டொக்டர் ஸாகிர் நாயக் எமது அவுவலகத்துக்கு விஜயம் செய்தார்.
அந்தக் காலத்தில் நான் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். மனிதனுடைய சிந்தனையைத் தூண்டும் வகையில் இஸ்லாத்தைப் பற்றி ஏனைய சமயங்களுடனான ஒப்பீட்டளவிலான கருத்தாழம் மிக்க அவரின் உரைகள் பலவற்றை நான் செவிமடுத்தும் இருந்தேன். ஆனால் அவரை சந்தித்தது இல்லை. எனவே அந்த முதலாவது சந்திப்பு என்னுள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
சுமார் இரு மணிநேரம் அந்த சந்திப்பு நீடித்தது. பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசினோம். அந்தக் காலப்பகுதியில்; தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் போதகர் அஹமட் தீதாத் தன்னுடைய தள்ளாத வயதிலும் வீரியம் மிக்க பேச்சால் உலகை உசுப்பிக் கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு அவரின் உரைகள் அறிவூட்டும் ஊக்கமருந்தாக அமைந்திருந்தன. இஸ்லாம் பற்றி உலகின் ஏனைய பாகங்களிலும் அறியாமை இருளில் மூழ்கி உள்ளவர்களை இந்த உரைகள் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன.
அஹமட் தீதாதுக்குப் பிறகு அவரின் இடைவெளியை நிரப்பக்; கூடிய எல்லா திறமைகளும தகுதிகளும்; சாகிர் நாயக்கிற்கு உள்ளதை நான் அன்றே உணர்ந்து கொண்டேன். அவரும் தனது பணியை அயராது தொடர்ந்தார். உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளுக்கும் விஜயம் செய்து இஸ்லாம் பற்றி முன்னொருபோதும் இல்லாத விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரின் பங்களிப்பால் கவரப்பட்ட பெரும்பாலும் எல்லா நாடுகளையும் சேர்ந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அவர்கள் மதச்சார்பற்றவர்களாகவும் தமது குடிமக்கள் மீது சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்பவர்களாக இருந்தும் கூட சாகிர் நாயக்கை வரவேற்று விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கத் தவறவில்லை.
அவரின் விரிவுரைகளால் ஏற்படுத்தப்பட்ட சமய விழிப்புணர்வுகள் இஸ்ரேலிய அனுசரணையுடன் அமெரிக்க பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான யுத்த வெறியர்களுக்கு இஸ்லாத்துக்கு எதிரான அவர்களின் பிரசாரத்தில் பெரும் தடையாக இருந்தன. இந்தப் பின்னணியில் நரேந்தி மோடி இந்தியாவின் பிரதமராக வந்ததையடுத்து இந்தியாவின் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ படைகளும் இந்த நவீன மேலைத்தேய சிலுவை யுத்தப் படைகளுடன் கைகோர்த்துக் கொண்டன. ஆர்எஸ்எஸ் இன் ஆதிக்கம் கொண்ட இந்திய அரசு சாகிர் நாயக்கை நசுக்கி அவர் மீது தடை விதிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தது வெளிப்படையான உண்மையாகும்.
அந்த வகையில் அவர் இந்திய அரசின் பிரதான குறியாக இருந்தார்.
இந்நிலையில் தான் சாகிர் நாயக்கின் உரைகள் பயங்கரவாதத்தையும் வன்முறைகளையும் தூண்டியுள்ளன என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இம்மாத முற்பகுதியில் பங்களாதேஷ் தலைநகரில் ஒரு உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவரான நிப்ராஸ் இஸ்லாம் என்பவர் தான் சாகிர் நாயக்கின் உரைகளாலேயே தூண்டப்பட்டதாகக் கூறினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது சாகிர் நாயக்கை அடக்குவதற்கான இந்திய – பங்களாதேஷ் சதியின் ஒரு அங்கமாக இருக்கலாம். இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைத்து வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பதிலாக அமையும் அவரின் விரிவுரைகளை நிறுத்துவதற்கான ஒரு சதித்திட்டமே இதுவாகும் என்பதுதான் பலரதும் சந்தேகமாகும்.
டாக்கா சம்பவத்துக்கு எதிரான நடவடிக்கையாக இந்திய அரசு சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது. இந்திய உள்துறை அமைச்சர் கிரேன் றிஜ்;ஜு 'சாகிர் நாயக்கின் உரைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எமது புலனாய்வு நிறுவனங்கள் இதுபற்றி ஆராயத் தொடங்கியுள்ளன' என்றார்.
மஹாராஷ்டிர மாநில புலனாய்வு திணைக்களம் சாகிர் நாயக் பற்றி எந்தவொரு வழக்கோ அல்லது முறைப்பாடோ அற்ற நிலையில் அவருடைய அலுவலகத்துக்கு விஷேட குழுவொன்றை அனுப்பியது. ஆரம்ப கட்ட விசாரணையாக இந்தப் பிரிவு யு டியுப் வலைதலத்திள் உள்ள நூற்றுக்கணக்கான அவரின் உரைகளை செவிமடுத்தது. இவற்றுள் இந்தியாவிலும் உள்ளுரிலும் அவர் நிகழ்த்திய உரைகள் அடங்கும். இதேபோல் இன்னும் பல மாநிலங்களில் உள்ள புலனாய்வு அதிகாரிகளும் சாகிர் நாயக்கின் உரைகளை ஆராய்ந்தனர்.
இந்திய தினசரியான த இந்து பத்திரிகையில் 'மஹாரஷ்டிரா விசாரணையில் சாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை' எனும் தலைப்பில் ஷரத் வயாஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில்: 
மஹாரஷ்டிரா புலனாய்வு பிரிவு சாகிர் நாயக் குற்றம் அற்றவர் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. அவருக்கு எதிராக குற்றம் சாட்டவோ வழக்குத் தொடரவோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அரச உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட விசாரணையைக் கையாண்ட இந்த விஷேட புலனாய்வு பிரிவு அவரைக் கைது செய்யவும் முடியாது என மறுத்துவிட்டது. சாகிர் நாயக் அப்போது வெளிநாட்டில் இருந்தார். இந்தியா திரும்பியதும் அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதே இந்திய அரசின் திட்டமாகும்.
நாம் அவரின் அசைவுகளை அவதானித்து வருகின்றோம். அவர் நாடு திரும்பியதும் ஏதாவது வித்தியாசமாகக் கூறினால் நாம் அவரை நெருங்கலாம். இப்போதைக்கு நாம் அவரை நுணுக்கமாக கண்கானிக்க முடியுமே தவிர வேறு எதுவம் எம்மால் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் அரச உயர் மட்டத்திடம்  இதை தெளிவாகக் கூறிவிட்டனர். சாகிர் நாயக் மீது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய குற்றம் சுமத்துவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. டாக்காவில் அல்லது ஹைதராபாத்தில் அவர் பயங்கரவாதத்தை தூண்டியமைக்கான எந்த தடயங்களும் இல்லை. தலிபான் அற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் பற்றியும் ஒசாமா பின் லேடன் போன்றவர்கள் பற்றியும் அவர் காரசாரமான கருத்துக்களையே முன்வைத்துள்ளார். இதனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது என்று இந்திய புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் பல முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. சாகிர் நாயக்கிற்கு ஆதரவு தெரிவித்த அவை மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்தன. சுமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான ஒரு குரலை நசுக்க எடுக்கப்பட்ட முய்றசியாகவே இவை சித்தரிக்கப்பட்டன.
இந்திய ஊடகங்களில் வெளியான 'மும்பாயில் உள்ள இஸ்லாமியப் போதகர் சாகிர் நாயக்கும் டாக்கா பயங்கரவாத தாக்குதலை அடுத்து விஷேட புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளும்' எனும் தலைப்பிலான மற்றொரு அறிக்கையில் :
49 வயதான தொழிற்சார் பயிற்சி உடைய ஒரு மருத்துவரான சாகிர் நாயக் இஸலாம் மற்றும் ஒப்பீட்டளவில் சமயங்கள் பற்றிய சர்வதேச கீர்த்திமிக்க ஒரு பேச்சாளராவார். மும்பாயில் உள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். இஸ்லாமிய கருத்துக்களைத் தெளிவுபடுத்தி இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களை அவர் நீக்கி வருகின்றார். இதற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அவர் புனித குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மற்றும் வேத நூல்களைப் பயன்படுத்தி வருகின்றார். விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் ஏனைய நியாய வாதங்களின் அடிப்படையிலும் அவர் தனது கருத்துக்களை நிறுவி வருகின்றார். அவரின் காரசாரமான ஆக்கபூர்வமான ஆய்வுரீதியான கருத்துக்களால் அவர் புகழ்  பெற்றுள்ளார். அவரிடம் பொது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நியாயபூர்வமான பதில்களை ஆதாரங்களோடு அவர் வழங்கி வருகின்றார். அதேபோல் எழுப்;பப்படும் சந்தேகங்களுக்கும் தெட்டத் தெளிவான விளக்கங்களை அவர் வழங்கி வருகின்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 வரையான 20 வருட காலப்பகுதியில் அவர் உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் இரண்டாயிரம் பொது விரிவுரைகளை நிகழ்த்தி உள்ளார்.
2009ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தர வரிசையில் கோடிக்கணக்கான இந்திய மக்கள் தொகையில் மிகவும் சக்தி மிக்க 100 இந்தியர்கள் வரிசையில் சாகிர் நாயக் 82வது இடத்தில் உள்ளார். 2010ல் 89வது இடம் கிடைத்தது. 2009ல் இந்தியாவின் மிகச் சிறந்த பத்து சமயத் தலைவர்கள் வரிசையில் அவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. 2010ல் அதை விட ஒரு இடம் மேலே சென்றார். அமெரிக்காவின் ஜேர்ர்ஜ் டவுண் பல்கலைக்கழக வருடாந்த தெரிவின் படி உலகில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் வரிசையில் அவர் 70வது இடத்தைப் பிடித்துள்ளார். 2011ஃ12, 2013ஃ14, மற்றும் 2014ஃ15ம் ஆண்டுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.
2006 ஜனவரியில் அவர் Pநயஉந வுஏ (சமாதான தொலைக்காட்சி) யை தொடங்கினார். இந்த வலையமைப்பின் பின்னால் தொடர்ந்தும் ஒரு உந்து சக்தியாக அவர் திகழுகின்றார். உலகில சகல சமயங்களையும் சேர்ந்த் ஆகக் கூடுதலான மக்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு சமய ரீதியான தொலைக்காட்சியாகவும் இஸ்லாமிய தொலைக்காட்சியாகவும் அது உள்ளது. அதன் பார்வையாளர்கள் 100 மில்லியனுக்கும் அதிகமாகும். இதில் 25 வீதமானவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உருது, வங்க மொழி மற்றும் சீன மொழிகளிலும் அவர் அதனைத் தொடங்கினார். உலகின் முன்னணி பத்து மொழிகளில் இதன் சேவைகளை விஸ்தரிப்பதற்கான திட்டங்களும் அவரிடம் உண்டு.
உலகின் பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைகளில் சாகிர் நாயக் தோன்றி வருகின்றார். தொடர்ச்சியான தொலைக்காட்சி வானொலி நேர்காணலுக்காக அவர் அழைக்கப் படுகின்றார். நூற்றுக்கணக்கான அவரின் உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் என்பன டிவிடி வடிவிலும் இன்னும் பல ஊடக வடிவிலும் உள்ளன. ஓப்பீட்டில் சமயங்கள் மற்றும் இஸ்லாம் என்பன பற்றி அவர் பல நூல்களையும் எழுதியுள்ளார்.
ஏனைய சமயங்களின் முக்கிய புள்ளிகளுடன் வெற்றிகரமாக அவர் பல விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றுள்ளார். 2001 ஏப்பிரல் 1இல் டொக்டர் வில்லியம் கெம்பலுடன் (அமெரிக்கா) சிக்காகோவில் 'விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் பைபிளும்' எனும் தலைப்பில் அவர் நடத்திய பகிரங்க விவாதம் மிகவும் வெற்றிகரமான ஒரு விவாதமாகும். 2006 ஜனவரி 21ல பெங்களுரில்; பிரபல இந்து மத போதகர்  ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கருடன் 'புனித வேத நூல்களின் ஒளியில் இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் இறை கோட்பாடு' எனும் தலைப்பிலான விவாதம் இரு தரப்பினரதும் அளப்பரிய பாராட்டைப் பெற்றது.
இஸ்லாம் மற்றும் ஒப்பீட்டு சமயங்கள் பற்றிய உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் ஷேக் அஹமட் தீதாத் 1994ல் சாகிர் நாயக்கை 'தீதாத் பிளஸ்' என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் போதனைப் பணியிலும் ஒப்பீட்டளவில் சமயங்களைக் கற்றுக் கொண்டமைக்காகவும் நினைவுச் சின்னம் வழங்கி அவரை கௌரவித்துள்ளார். 'மகனே நீ நான்கு வருடங்களில் செய்து முடித்துள்ள காரியத்தை செய்து முடிக்க எனக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டது' என பெருந் தன்மையோடு சாகிர் நாயக்கை அவர் பாராட்டியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையொன்றில் ணுநந ஊடக பணியகத்தை மேற்கோள் காட்டி வெளியடப்பட்டுள்ள ஒரு தகவலில் சர்ச்சைக்குரிய வலது சாரி இந்து தலைவரான சத்வி பிராச்சி சாகிர் நாயக்கின் தலைக்கு 50 லட்சம் ரூபா வழங்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். உத்துரகாண்டில் ரூர்க்கி என்ற இடத்தில் பேசும் போது சாகிர் நாயக்கை ஒரு பயங்கரவாதி என வர்ணித்த சத்வி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இந்திய அரசியலின் இன்றைய பரிதாபகரமான நிலை இதுதான்.

No comments

Powered by Blogger.