Header Ads



எயிட்ஸைத் தூரமாக்கும் இஸ்லாம்..!

-Dr. N. Ariff-

இன்று காணப்படுகின்ற ஆட்கொல்லி நோய்களில் பிரதானமான ஒன்றாக எயிட்ஸ் நோய் கருதப்படுகின்றது. தீர்க்கமான நோய் நிவாரணி இன்னும் கண்டறியப்படாத நிலையில், அந்த நோய் ஏற்படுவதினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே அதற்கான சரியான பரிகாரமாகும்.

எயிட்ஸ் ஏற்படுகின்ற வழிமுறைகளில் முக்கியமான ஒன்றின் காரணமாகவும், அந்நோயின் வெளிப்படுகையின் தன்மை காரணமாகவும், அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கின்றதொரு ஏற்புடையதல்லாத நிலைமை உருவாகியுள்ளதால், அந்நோய் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. அதனால் வருடந்தோறும் திசெம்பர் மாதம் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, மக்களுக்கு அந்நோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகின்றது.

உலகில் சுமார் 35 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வருடந்தோறும் ஏறக்குறைய 25 இலட்சம் புதிய எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டிலும் இதுவரை 3300 பேர் இந்தக் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனராயினும், இந்தத் தொகை விரைவாக அதிகரிக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 1981 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒர் அரியவகையான நியுமோனியாவைக் கண்டறிந்து வெளியிட்ட அறிக்கையே எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்டதற்கான முதலாவது ஆவணமாகும். எனினும் 1983ம் ஆண்டில் தான் இந்நோய் வைரஸ் கிருமியினால் உருவாகிறது எனக் கண்டறியப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக்கூடத்தில் அந்நாட்டு விஞ்ஞானியான லூக்மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எல். ஐ. வி. வைரஸ் எனப் பெயரிடப்பட்டதாயினும், 1986ல் தான் தற்போதைய எச். ஐ. வி. வைரஸ் என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எவ்வாறு கண்டுபிடிப்பது:

எச். ஐ. வி. வைரஸின் பிரசன்னத்தை இரத்தப்பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம். அதனோடு சம்பந்தப்பட்ட அன்ரிஜென் மற்றும் அன்ரிபொடி பரிசோதனைகள் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம். இந்த வைரஸ் கிருமி ஒருவரைத் தொற்றி 2 கிழமைகளுக்குப் பிறகு இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். ஆனால், ஒரு தடவைப் பரிசோதனையின் முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது. சந்தேகத்துக்குரியவர்களுக்கு மீளவும் பல தடவைகள் பரிசோதனை செய்யப்படும்.

எனினும், எயிட்ஸ் நோயை நேரடியாகக் கண்டறிய எந்தப் பரிசோதனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக்கொண்டால், இந்தக் கொடிய நோயைத் தூரமாக்கி விடலாம். அதற்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட அனைத்து பாலியல் முறைகளில் இருந்தும் தூரமாக வேண்டும்.

ஆண்களுக்குச் செய்யப்படுகின்ற விருத்தசேதனம் கூட எயிட்ஸ் நோயிலிருந்து மட்டுமல்ல ஏனைய பாலியல் நோய்களில் இருந்தும் தூரமாக்குகிறது என்பதை மேலைத்தேய நாடுகளின் ஆய்வறிக்கைகள் கூட ஏற்றுக்கொள்கின்றன.

அல்லாஹூவைப் பயந்து கொள்ளுங்கள்! கண்ணியத்திற்குரிய அல்லாஹூவின் கூற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 6:151)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (அல்குர்ஆன் 17:32)

எயிட்ஸ் நோயாளிகள் பொதுவாக சமூகத்தின் பார்வையில் வேண்டப்படாதவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். ஒரு எயிட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும் கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எயிட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாகக் கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

No comments

Powered by Blogger.