Header Ads



வாட்டும் குளிர், முஸ்லிம்களை வதைக்கும் ஐரோப்பிய நாடுகள்..!

பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அகதிகளை தடுத்து நிறுத்தி விரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கடல் மார்க்கமாக துருக்கி மற்றும் கிரேக்கத்தின் தீவுப் பகுதிகளில் கரையேறும் அகதிகள் அங்கிருந்து தரைவழியாக ஆஸ்திரியா, ஜெர்மனி நாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரை 8.5 இலட்சம் அகதிகள் ஐரோப்பாவில் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் பாரிஸ் நகருக்குள் ஊடுருவி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கெடுபிடியை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டன.

பால்கன் நாடுகளான அல்பேனியா, மெசிடோனியா, பல்கேரியா, ருமேனியா, செர்பியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடிவிட்டன. கிரேக்கத் தீவுகளில் கரையேறிய அகதிகள் தாங்கள் விரும்பும் ஐரோப்பிய நாடுகளுக்கு மெசிடோனியா வழியாக செல்ல கடந்த ஒரு மாதமாகக் காத்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களை மெசிடோனியா பொலிஸாரும் இராணுவ வீரர்களும் எல்லையில் முள்வேலி அமைத்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்போதைய நிலையில் கிரேக்கத்தின் வடக்குப் பகுதி கிராமமான இடோமேனியில் சுமார் 1500 ற்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக குளிர், மழையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் அகதிகளுக்கும் மெசிடோனியா பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. முள்வேலியை வெட்டிவிட்டு மெசிடோனியா எல்லைக்குள் செல்ல அகதிகள் முயன்றனர். அப்போது பொலிஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அகதிகளை விரட்டியடித்தனர்.

இதேபோல ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அகதிகள் பரிதவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.