அல்-ஜசீரா நிருபர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
எகிப்தில் அனுமதியின்றி செயல்பட்ட அல் ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் மூன்று பேருக்கு தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு முகமது மோர்ஸி தலைமையிலான முஸ்லிம் சகோதரத்துவ ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை செய்தியாக வெளியிட்ட அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஆஸ்திரேலிய, கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த நிருபர்கள் 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உரிய ஊடக அனுமதியின்றி ஒளிபரப்பு கருவிகளை இயக்கியதாகவும், தவறான செய்தியை ஒளிபரப்பியதாகவும், இது நாட்டுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அல் ஜசீரா பத்திரிகையாளர் மூவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் முகமது பாக்மி, பாகர் முகமது ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மற்றொரு நிருபர் பீட்டர் கிரெஸ்ட் கடந்த பிப்ரவரி மாதம் அவரது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டதால் அவர் தண்டிக்கப்படவில்லை.
தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் நீதிமன்ற அறையில் இருந்த நிருபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் தண்டனை பெற்ற நிருபர்களின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியுடன் வெளியேறினர்.
தண்டனை பெற்ற நிருபர்களுக்கு பொது மன்னிப்பு பெறுவது தொடர்பாக தூதர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment