Header Ads



முஸ்லிம் காங்கிரசுக்குள் பிளவை ஏற்படுத்த சதி - நிஸாம் காரியப்பர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரம் தமது கட்சியை பிளவுடுத்துவதர்கான சதி முயற்சியாகும் என அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் குற்றம் சாட்டுகின்றார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

"தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்த நிலைப்பாடு சகல சிறு கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும்.

இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அரேபியா சென்றிருந்த போது அவர் சார்பில் அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நான் தெரிவித்திருந்தேன்.

இந்த நிலைப்பாட்டாடு சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சரான றிஷாத் பதியுதீனும் அமைச்சர் திகாம்பரமும் ஏற்றுக் கொண்டு அவர்களும் அதற்கு உடன்பட்டிருந்தார்கள்.

அதாவது முன்மொழியப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் கொண்டுவரும் படசத்தில் அது சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளினால் ஏற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலைப்பாடாகும்

தற்பொழுது ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அதன் பேச்சாளர் நிஷாந்தவும் இதற்கு பிழையான கருத்தை வெளியிட்டு, நிஸாம் காரியப்பர் ஒரு விதமாகவும் அதற்கு முரண்பட்ட கருத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்வதாகவும் கூறி பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இது முற்றுமுழுதாக எமது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான சதி முயற்சியாகும்" என்று நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.