மஹிந்த அரசியலுக்கு வந்தால் SLFP உடைந்து, தம்மால் வெல்ல முடியுமென UNP கணக்குப்போடுகின்றது
இந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்குக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லலாம். ஆனால் அவர் வடக்குக்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது ஆராயப்படவேண்டிய விடயம். இந்தியா, சீனாவை விட எமது பாதுகாப்பும் வளங்களும் முக்கியமானவையாகும்என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் தூய்மையானதொரு நாளை அமைப்பின் தலைவருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகையின்போது எவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படப்போகின்றன என்பது குறித்து நாம் அறிந்திருக்கவேண்டும். சீபா போன்ற மற்றுமொரு உடன்படிக்கைக்கும் அனல் மின்நிலைய உடன்படிக்கைக்கும் இந்தியா தயாராவதாக தெரிகின்றது. இந்தியா, சீனா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உபாய ரீதியான செயற்பாட்டுக்குள் எமது நாடு சிக்கிவிடக்கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதியையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தேர்தலில் தெரிவு செய்யும் மாற்றங்கள் அவசியம். அத்துடன் விருப்புவாக்கு முறையற்ற தேர்தல் முறை கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சமூக நீதிக்கான அமைப்பின் தொழில்சார் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துரலியே ரத்தன தேரர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். சீனா இந்தியா போன்ற நாடுகளும் மேற்குலக நாடுகளும் எமது நாட்டில் தமது உபாய ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
எமது நாட்டுக்கு தெற்கேயுள்ள மாலை தீவில் இந்தியாவின் உதவியுடன் பதவியில் இருந்த ஜனாதிபதியை நீக்கிவிட்டு அமெரிக்கா பாதுகாப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. இநநிலையில் இலங்கை இன்று பல நாடுகளின் உபாய ரீதியான தேவைக்கான செல்வாக்கு மிக்க நாடாக உள்ளது. துறைமுகம் மற்றும் எரிசக்தி ரீதியில் இந்தியா உபாய ரீதியான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்கலாம்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற சீபா போன்று மற்றுமொரு உடன்படிக்கையை இந்தியா இலங்கையுடன் முன்னெடுக்கலாம். குளிரூட்டப்பட்ட அறைகளில் இதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு செல்கின்றார்.
இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகின்றார். மேலும் இலங்கையில் அடுத்த ஆட்சியில் அமரப்போவது யார் என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. எனவே இவ்வாறான சர்வதேச ரீதியான உபாய செயற்பாடுகளுக்கு இடையில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
குறிப்பாக இந்திய பிரதமர் மோடியின் இலங்கை வருகையின்போது எவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படப்போகின்றன என்பது குறித்து நாம் அறிந்திருக்கவேண்டும். அனல் மின்நிலையம் ஒன்றுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் நிலை காணப்படுகின்றது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தேவையானதை இங்கு செய்ய முடியாது. இந்தியாவின் நகர்வுகள் குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும். அறைகளில் திருட்டுத்தனமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது நாட்டின் தேசிய பாதுகாப்பையும் வளத்தையும் விற்க இடமளிக்க முடியாது.
இந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்குக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லலாம். ஆனால் அவர் வடக்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது ஆராயப்படவேண்டிய விடயம். இந்தியா சீனாவை விட எமது பாதுகாப்பும் வளங்களும் முக்கியமானவையாகும்.
தற்போது புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் குறித்து பேசப்படுகின்றது. இதில் பல விடயங்கள் உள்ளன. எவ்வாறெனினும் அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக விசாரணைகள் என்பன கட்டாயம் இடம்பெறவேண்டும். ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க ஐககிய தேசிய கட்சிக்கு தேவை உள்ளது. காரணம் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க அந்தக் கட்சி முயற்சிக்கின்றது. ஆனால் இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சி வேறு நிலைப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு விடயங்களுக்குள்ளும் சிக்கிவிடாமல் நாம் இருக்கவேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் உள்ள பாதகமான விடயங்கள் எமக்குத் தெரியும். பாராளுமன்றத்தக்கு பொறுப்புக்கூறாத சர்வாதிகாரி போன்ற செயற்படுகின்ற பல விடயங்கள் உள்ளன. எவ்வாறெனினும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையிலான அரசியலமைப்பு மாற்றத்துக்கே நா்ஙகள் செல்லவேண்டியுள்ளது. ஆனால் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
ஆனால் இந்த ஜனாதிபதி முறை மாற்றத்துடன் தேர்தல் முறை மாற்றமும் தொடர்புபட்டுள்ளது. எனவே தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும். ஆனால் முழுமையாக தொகுதி முறைக்கு செல்ல முடியாது. மாறாக விருப்பு வாக்கு முறைமையற்ற தேர்தல் முறைமை ஒன்றுக்கு செல்லவேண்டும். ஆனால் இதற்கு தீர்வாக கலப்பு தேர்தல் முறை வராது. மாறாக விருப்பு வாக்கு அற்ற தேர்தல் முறை வரும். மேலும் தேர்தல் முறை மாற்றமானது குறிபபாக ஜனாதிபதி தெரிவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவும் ஒரே தடவையில் அமையவேண்டும். அப்போதுதான் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் ஆதிக்கத்தை குறைக்கலாம்.
கடந்த காலங்களில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதனை மாற்ற முடியாது. போதைப்பொருள் கொண்டுவந்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும். இல்லாவிடின் அது தவறான உதாரணமாகிவிடும்.
இந்த ஊழலுக்கு எதிரான தண்டனை வழங்கும் செயற்பாட்டில் அரசியல் கட்சிகள் தமது சுய அரசியல் கணக்குகளை போட்டுக்கொண்டிருக்கின்றன. அதாவது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்தால் சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்துவிடும் என்றும் அப்போது தம்மால் வெற்றிபெற முடியும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி கணக்குப்போடுகின்றது. இதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கியுள்ளனர். பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மொணராகலை உள்நாட்டு பால் உற்பத்தியாளர் இன்று பாரியளவில் பாதிக்க்ப்பட்டுள்ளார். இது தொட்ர்பில் கவனம் எடுக்கவேண்டும் என்றார்.
Post a Comment