பொத்துவில் சாலை முகாமையாளர் அஸ்வத்தின் விளக்கம்..!
(எம்.ஏ.றமீஸ்)
இலங்கை போக்குவரத்துச் சபையின் பொத்துவில் சாலைக்கு புதிதாக மூன்று பஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை தூரப் பிரதேசங்களுக்கான சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைளில் தாம் ஈடுபட்டு வருவதாக பொத்துவில் சாலை முகாமையாளர் எம்.எம்.அஸ்வத் தெரிவித்தார்.
இலங்கை போக்கு வரத்துச் சபையின் பொத்துவில் சாலைக்கு மூன்று பஸ் வண்டிகள் அண்மையில் போக்குவரத்துப் பிரதி அமைச்சரினால் வழங்கப்பட்டது. இருப்பினும் சில தரப்பினர் இச்சாலைக்கு இரண்டு பஸ் வண்டிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றன என ஊடகங்களுக்கு தெரியப் படுத்தி வருகின்றனர். இவ்விடயம் பற்றி சாலை முகாமையாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாலை முகாமையாளர் எம்.எம்.அஸ்வத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 22 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற வைபவமொன்றின்போது போக்கு வரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீகினால் எமது சாலைக்கென இலங்கை போக்கு வரத்து சபையினால் வழங்கப்படும் அரை சொகுசு பஸ் வண்டிகள் மூன்று வழங்கப்பட்டன. அவ்வண்டிகள் தற்போது எமது பொத்துவில் சாலையில் உள்ளன.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற இம்மூன்று வண்டிகளும் குறுந் தூரப் பிரதேச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, மொனறாகலை போன்ற தூரப் பிரசேதங்களுக்கென இவற்றை சேவையில் ஈடுபடுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியினை பெறும் வகையில் பிராந்திய அலுவலகங்களிடம் நாம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அதற்கான அனுமதியும் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றவுடன் இவ் வண்டிகள் தூரப் பிரதேச சேவைக்கென உடனடியாக ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொத்துவில் போக்குவரத்துச் சபையின் சாலையினை பல்வேறு துறைகளிலும் நாம் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இத்தறுணத்தில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை சிலர் வெளியிடுவது கவலையளிக்கின்றது. சுய நலமற்று மக்களுக்கான சேவையினை பாகுபாடற்ற வகையில் நாம் மேற்கொள்ள எச்சந்தர்ப்பத்திலும் தயாராக உள்ளோம். உலகில் வெகுவாகப் பேசப்பட்டு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தளமான பொத்துவில் பகுதியில் இடைவிடாத போக்குவரத்துச் சேவையினை எமது சாலை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment