31 ஆயிரம் முஸ்லிம் போராளிகளை எதிர்கொள்ள, 37 நாடுகள் களத்தில் குதிக்கின்றன...!
'ஈராக் மண்ணில் கால் வைக்காமல், அமெரிக்காவால், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியும்' என, அமெரிக்க அதிபரின், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக் அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு, பல நகரங்களை கைப்பற்றி, இஸ்லாமிய பிரதேசமாக அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா, பயங்கரவாதிகளை வேட்டையாடப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். அதற்காக, அந்நாட்டின் விமானப்படை முழு வீச்சில் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன், அதிகபட்சம், 10 ஆயிரம் பேர் தான் இருப்பர் என கருதப்பட்ட நிலையில், 31 ஆயிரத்து, 500 பேர் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்., க்கு எதிரான வேட்டையில், 37 நாடுகள் இணைந்துள்ள நிலையில், சீனா இணையப் போவதில்லை என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் வருகை: ஈராக்கில் பயங்கரவாதிகள் கை ஓங்கிய பின், எந்தவொரு நாட்டின் தலைவரும், அங்கு வராத நிலையில், பிரான்ஸ் அதிபர், பிரான்கோயிஸ் ஹாலந்தே நேற்று பாக்தாத் சென்று, பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் ஈராக் அரசுக்கு ஆதரவு அளித்தார்.
மேலும், தன் விமானத்தில், 15 டன் அத்தியாவசிய பொருட்களையும் அவர் ஏற்றி வந்திருந்தார். அவற்றையும், ஈராக் அதிகாரிகளிடம் வழங்கினார். குர்திஸ்தான் சுயாட்சியின் தலைநகர் அர்பிலுக்கு இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
Post a Comment