Header Ads



'மத்ரசாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்று தெளிவினை அரசாங்கமே வழங்க வேண்டும்'

(எஸ்.அஷ்ரப்கான்)

அறபு மத்ரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாக பொதுபலசேனா குறிப்பிடுவதன் மூலம் இந்த அரசாங்கம் நாட்டு நடப்புக்கள் தெரியாத  அரசு என பொதுபல சேனா கூறுவதாகவே கருத வேண்டியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாருள்குர்ஆனில் நடைபெற்ற கட்சி உயர் சபை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் உள்ள அறபு மத்ரசாக்கள் அனைத்தும் அரசாங்கத்திணைக்களத்தில் பதியப்பட்டே உள்ளன. அந்த திணைக்களமும் பௌத்த சாசன அமைச்சின் கீழேயே இருக்கிறது. இதன் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இருக்கின்றார். இந்த நிலையில் மத்ரசாக்களில் தீவிரவாதம் கற்றுக்கொடுப்பதாக பொதுபல சேனாவின் கண்டு பிடிப்பானது  மத்ரசாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்று தெரியாதவர்களுக்கு சிறப்பான தெளிவினை எமது  அரசாங்கமே வழங்க வேண்டும்.

இலங்கையின் பதியப்பட்ட அறபு மத்ரசாக்களின் வரலாறு சுமார் நூறு வருடங்களை எட்டுகிறது. இந்த மத்ரசாக்களினால் இதுவரை எந்தவொரு தீவிரவாதியும் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டதாக ஆதாரப்பூர்வமான ஒரு தகவலும் இல்லை. இத்தனைக்கும் முஸ்லிம் மக்கள் தமிழ் ஆயுத போராளிகளால் பாரிய இன்னல்களை சந்தித்த போதும் கூட மத்ரசாவில் கற்றவர்களில்  ஒருவர் கூட துப்பாக்கி பிடித்து ஏனைய இனத்துடன் சண்டையிட்டதாக ஒரு பொலிஸ் பதிவு கூட இல்லை. ஒரு இலட்சம் வட மாகாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது மத்ரசாவில் படித்த ஒருவராது இதனை எதிர்த்து புலிகளுடன் சண்டையிட்டு தனது உயிரை தியாகம் செய்யவுமில்லை. 

இப்படியான பயங்கரமான நிலைகளிலும் கூட துப்பாக்கி என்ன கத்தி கூட இன்னொரு இனத்துக்கெதிராக தூக்காத மிகவும் கண்ணியமான சுபாவமுள்ளவர்களே மத்ரசாக்களில் உருவாக்கப்படுகிறார்கள். இலங்கை மத்ரசாக்களில் போதித்துக்கொடுப்பதே அடித்தால் அடிவாங்கிக்கொண்டு பொறுமையாக பிரார்த்தனை பண்ணிக்கொண்டிரு என்பதுதான். இதன் காரணமாகத்தான் பொதுபலசேனா மூலம் ஹலால் ஒழிக்கப்பட்ட போது எமது மௌலவிமார் மௌனமாக இருந்தார்கள்.

உண்மையில் மத்ரசாக்களில் தீவிரவாதம் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தால் குறைந்தது தமது சமூகத்து அரசியல்வாதிகள் இந்த சமூகத்தை பச்சையாக ஏமாற்றும் இந்த சந்தர்ப்பத்திலாவது இத்தகைய ஏமாற்று சுயநல கட்சிகளுக்கெதிராக குறைந்தது சத்தமாவது இட்டிருப்பார்கள். அதனை விடுத்து யார் எக்கேடு கெட்டால் என்ன தமது பிழைப்பு நிம்மதியாக நடந்தால் போதுமென்றே நூற்றுக்கு தொண்ணூற்றொன்பதே முக்கால் வீதமான மௌலவிமார் உள்ளனர். இந்த லட்சணத்தில் மத்ரசாக்களில் தீவிரவாதம் கற்றுக்கொடுக்கப்படுகின்றது என்பது இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி கொஞ்சமும் தெரியாதவர்களின் கருத்தாகும். என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.