Header Ads



விறகில் பூத்த மலர்..!


(மூதூர் முகம்மதலி ஜின்னா)

மூன்று பெண்குழந்தைகள். ஓரு ஆண்குழந்தை. தொழில் கூலி. என்றாலும் உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து கொள்ளும் திருப்பதியான வாழ்க்கை. ஊருக்கு ஓரமாக சுழித்துக்கொண்டோடும் மகாவலியின் கிளை ஆற்றைக் கடந்து சென்று வேகத்தீவுக்கு அப்பால்  பொலநறுவை வரை பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் சென்று விறகெடுத்து வந்து கொத்திப் பிளந்து கொண்டு சென்று விற்றுப்பின் அன்றைய நாள் சிலவேளை அடுத்த நாளுக்குமான அரிசி, பருப்பு மற்றும் துணைச்சாதனங்கள் வீடு வந்து சேரும். இத்தனைக்கும் விறகேற்றி வரும் வண்டில் சொந்தமில்லை. வ.அ.வின் 'தோணி' சிறுகதையில் சொந்தத்தோணிக்காக ஏங்கும் இளைஞனின் நிலையில் தான் நபீக்கினுடைய நிலையும். அக்கதையில் இளைஞன் தோணிக்காக ஏங்கினான். நிஜத்தில் குடும்பஸ்த்தர் நபீக், தனக்கும் ஒரு சொந்தமான வண்டிலுக்காக ஏங்கினார்.

மனைவியின் சிறு சம்பாத்தியங்கள், நபீக்கினுடைய சிறு சேமிப்புக்கள் எல்லாம் என்றைக்காவது ஒரு சொந்த வண்டிலுக்காக எனக் கருக்கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தச் சேமிப்புக்கும் அடிக்கடி சுணாமி அடித்தது. அடைமழையோ, சுகவீனமோ வந்து விட்டால், அல்லது படிக்கும் பிள்ளைகளின் சப்பாத்து, பென்சில், கொப்பி, தொப்பி போன்ற காரணங்கள் அச்சிறு செமிப்பில் கைவைத்து காரியமாற்றிவிடும்.

மூதூர் சாபி நகர் பிரதேச மக்களது பிரதான ஜீவனோபாயத்தின் ஒரு குறியீடாக நபீக் விளங்கினார். மகாவலியின் கிளையாற்றில் மின்பிடித்தல், வீட்டுத்தோட்டம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு தம் வாழ்வை ஓட்டும் அம்மக்கள,; தம் நாளில் பெரும்பாலான நேரத்தை உழைப்பதில் கழிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்புகள் அவர்களது கவனத்தைக் கவருவதில்லை. இந்த நாளில் 13 இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன 18க்கு கை உயர்த்தியதால் ஆகப்போகும் ஆபத்துக்களென்ன போன்ற வியாபாரங்களைப்பற்றிப் பேச அவர்கள் நேரம் ஒதுக்கத்தயாரில்லை.

மூன்று வேளை மூக்கு முட்ட சாப்பிட எந்தப்பிரச்சினையும் இல்லாதவர்களது வாழ்வில் லட்சியம் என்று ஏதேதோ இருக்கும். ஆனால் நபீக்கைப் பொறுத்தவரை சொந்தமாக ஒரு வண்டில். அதன் மூலம் பிள்ளைகள் வயிறு குளிர சாப்பிடுவதே பிறவிப்பயனாக தெரிந்தது. காலவோட்டத்தில் நபீக்கின் கனவு மெய்ப்பட்டது. தொத்தலும் வத்தலுமாக இரண்டு மாடுகளோடு கூடிய ஒரு பழையவண்டிலுக்கு நபீக் உரிமையாளனானார். எல்லோரையும் போல நபீக்கும் புத்தூக்கத்தோடு  சொந்த வண்டிலில் விறகெடுக்கப் போனார். வண்டில் நிறைய விறகோடு வந்து மனைவியோடு கொத்திப்பிளக்க, பிள்iளைகள்; கட்டாகக் கட்ட விறகு விற்ற காசு முழுதும் விட்டுக்கே. வீட்டில் சந்தோசம்  மெல்லத் தலைகாட்டத் தொடங்கியது.  

ஆனால் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லோரது வாழ்வையும் முப்பது வருடங்களாக ஏதோ ஒரு விகிதாசாரத்தில் தனது கையிலெடுத்து உருட்டி விளையாடியது உள்நாட்டு யுத்தம். அதில் நபீக்கினுடைய குடும்பம் மட்டும் விதிவிலக்காகிவிடுமா? அதுவும் மூதூரில் பிறந்து விட்ட பிறகு!!!. உள்நாட்டு விடுதலைப் போராட்டமானது, பிரிவினைகோராத முஸ்லிம்களையும் படியேறிவந்து, கதவு தட்டி நரபலி கேட்டு நின்ற ஒரு நெருக்கடியான காலகட்டம். அதற்குள்ளும் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் நபீக்கின் குடும்பமும்.

அன்றும் ஆளுக்கொரு நேர்ச்சையுடன் நண்பர்களும் நபீக்கும்  சொந்த வண்டில்களில் விறகெடுக்கச் சென்றனர்.  வேகத்தீவு தாண்டி கட்டவிழுந்தான் அடர்காட்டுப்பகுதியின் தனிமையில்  குருவிகளினதும், குரங்குகளினதும் இன்னிசை வார்ப்புக்களை காதாறக் கேட்டுக்கொண்டு விறகெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்த்திராத நிலையில் ஓசைப்படாமல் புலி ஒன்று வந்து பின்னால் நின்றதை நபீக்கும், நண்பர்களும் அறியவில்லை.

'ஆரடா நீங்கள்...ஆர் உங்கள இங்க வரச்சொன்னவெ..?' என்று அதட்டியதும் தான் பின்னால் இயந்திரத்துப்பாக்கியோடு புலி நிற்பது தெரிந்தது. வெகு வெகு அருகில் இயந்திரத்துப்பாக்கியைக் கண்டு 

'நாங்...நாங்க கொள்ளி எடுக்...'

'பொத்தடா...ஆரக்கேட்டு வந்த நீங்கள். இந்தக்காடு கரயெல்லாம் எங்களின்ட கட்டுப்பாடு... தெரியிமே..?!'

கோரசாக தலையாட்டினார்கள். அதே வேகத்தில் ஏற்றியபாதி ஏற்றாத மீதியாக வண்டில்களில் மடுகளைப்பூட்டி புறப்பட ஆயத்தமாக

'வண்டில எங்க கொண்டு போப்பறியல்....ம்ம்ம்...அதெல்லாஞ் சரிவெராது. விறகெடுக்க எங்களுக்கு வரி கட்டவேணும். தெரியிதே...வரியக்கட்டிப்போட்டு வண்டிலக் கொண்டு போங்கோ... போங்கோ'

திரு திரு வென விளித்தார்கள்.

'விளங்கேல்லியே...வண்டில் கிடக்கட்டும்.... மாடுகளக்கொண்டு போங்கோ...போய் காசக்கொண்டு றாக்குழி ரஞ்சன் அண்ணயிட்ட  கட்டி பில் எடுத்துக்;கிட்டு வந்து வண்டிலக் கொண்டு போங்கோ. செரியே' என்று கூறிக் கொண்டே ஒற்றைக்கையிலிருந்த இயந்திரத்துப்பாக்கியை அப்புலி இரண்டு கைகளிலும் ஏந்தியது.

மேற்கொண்டு தாமதிப்பது ஆபத்தானது என்பதை கடந்த கால அனுபவங்களூடே விளங்கிய நபீகு;ம், நண்பர்களும் ஓட்டமும் நடையுமாக மாடுகளைக்கலைத்துக் கொண்டு முள்ளையும், கல்லையும் வெறுங்கால்களால் வென்று வந்து சேர்ந்தனர். ஒருத்தர் மூன்று பேரைச்சமாளிக்கும் வைரம் பாய்ந்த கட்டையாக இருந்தென்ன? துப்பாக்கிக்கு முன்னால் தப்பினால் போதுமென்று வந்துவிட்டார்கள். 

ஓரு திகில்கதையைச் சொல்வது போல் சொல்லிக்களைததுப் போன நபீக்கின் கண்கள் அங்கிங்கு சுற்றி கடைசியில் மனைவியின் கழுத்தில் போய் மொய்த்தது. அங்கே வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சிறுகச்சிறுகச் சேமித்த சேமிப்பு ஒரு நூலளவில் மின்னியது.

நகைவிற்ற காசு, றாக்குழிப்பிரதேசபொறுப்பாளர் ரஞ்சனிடம்(மூலப்பொட்டி) கையளிக்கப்பட்டு 'புலிகளின் தாகம் தமிழீல தாயகம்' என்ற மகுடவாசகமும்(அழவவழ) 'தமிழ்பேசும் மக்களின் கௌரவமானதும், சமத்துவமானதுமான சகவாழ்வு' என்ற நோக்கக்கூற்றும்(எளைழைn) பொறிக்கப்பட்ட இளம்பச்சை ரசீது பெறப்பட்டு பின் அது கட்டஉழுந்தான் காட்டுப்பகுதிக்குப் பொறுப்பான புலியிடம் கொடுக்கப்பட்டு வண்டில் மீட்கப்பட்டது.

மீண்டு மிட்டு வந்த அதிர்ச்சியில் மூன்று நாட்கள் கழிந்தாலும் வயிற்றுக்கு அவையெதுவும் விளங்காதாகையால் நான்காவது நாளே விறகெடுக்கும் படலம் பதைபதைப்புடனும், நேர்ச்சைகளுடனும் ஆரம்பமானது. ஒரு வாரம் சுமுகமாகப்போய்க் கொண்டிருந்தது. அன்றும் அப்படியே விறகு பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் விட்டு விட்டு ஒரு சத்தம். வரவர அது ஒரு உழவு இயந்திரத்தின் சத்தம் என்று உறுதியானது. 'யாரோ ட்ரக்டரில் விறகெடுக்க வருகிறார்களாக்கும்' என எண்ணிக்கொண்டிருக்கையில் கூப்பிடு தூரத்திற்கு வந்துவிட்டது.  சில தளபாடங்களை ஏற்றிக் கொண்டு புலி ஒன்று ஓட்டிக்கொண்டு வந்தது. முன்னும் பின்னுமாக தலையிலும், தோளிலுமாக ஏனைய புலிகள் மூட்டைகளை சுமந்து கொண்டு வந்தன. நீண்ட தூரப்பயணமாக இருக்கவேண்டும். தூசு படிந்த தலையும், வியர்வையில் குளித்த முகமுமாக வந்த புலிகளின் முகங்கள் அவ்விடத்தில் பளீரெனப் பிரகாசமானது.

ஆமாம். அவர்கள் நடுக்காட்டில் நான்கைந்து வண்டில்களைக் கண்டு விட்டார்கள். கழுத்தொடியும் தம் சுமைகளைத் தாங்கும் சுமைதாங்கிகளைக் கண்டுவிட்டன.

'காக்காமார்...இறக்குங்களடா விறகெ' என உறுமின. என்ன நடக்கிறது. என்ன சொல்கிறார்கள் எனப்புரிந்து கொள்வதற்குள் மூட்டைகளை தரையில் வைத்துவிட்டு காடுமேடெல்லாம் தேடிச்சேர்த்த ஒரு வேளை உணவாக, பிள்ளைiயின் சப்பாத்தாக,பென்சிலாக, கொப்பியாக மாறக்காத்திருக்கும் விறகுகளை புலிகளே நாளா பக்கமும் உருவி எறிந்தன. நிலைமையைப் புரிந்து கொண்ட நபீக்கும், நண்பர்களும் தைரியத்தை கெஞ்சி வரவழைத்துக் கொண்டு, தாம் பத்திரமாக எடுத்து வந்திருந்த ரசீதை கொண்டு போய் தலைமைப் புலி போல் தோரனை காட்டிய சற்றுக்குள்ளமான புலியிடம்

'நாங்க காசி கட்டிட்டோம்' என நீட்டினர். அதனை வாங்கிப்பார்த்த அத்தலைமைப் புலி சிரித்துக் கொண்டே இரண்டாய்.. நான்காய்.. எட்டாய்.. கிழித்து சுலோமோசனில் கீழே போட்டது, 'புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்', 'தமிழ்பேசும் மக்களின் கௌரவமானதும,; சமத்துவமானதுமான சகவாழ்வு' எல்லாம்  திசைக்கொன்றாய் கிழிந்து கிடந்து புலிகள் உட்பட அனைவரையும் பார்த்துச் சிரித்தது. ஆனால் அந்தப் பெரிய புலி ஏதொன்றும் பேசாமல் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவியது. சப்த நாடியும்  அடங்க, ஸ்தம்பித்துப் போனார்கள். உருவிய துப்பாக்கியை முகத்துக்கு நேரே  நீட்டி மேலும் கீழுமாக அசைத்து காட்டைவிடடு சென்று விடுமாறு சைகை செய்தது.
மேற்கொண்டு இங்கு நிற்பது தற்கொலைக்கு ஒப்பானது என்பதைப்புரிந்து கொண்ட நபீக்கும், நண்பர்களும் வேக வேகமாக பின்நோக்கிச் சென்றனர். ஓரளவு தூரம் சென்றதும் தமது வண்டில்களுக்கு என்ன நேரப்போகிறது என்பதை ப்பார்ப்பதற்காக பற்றை மறைவில் ஒழிந்திருந்து பார்த்தார்கள். அங்கே புலிகள் சந்தோசமாகச் சிரித்துப் பேசிக் கொண்டு வண்டில்களில் தம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நின்ற மாடுகள் பலாத்காரமாக இழுத்துவரப்பட்டன. அவை வர மறுத்தன. அப்போது முன்னால் ஒரு புலி இழுக்க மற்றொரு புலி விறகுக்கட்டையால் அடிக்க அனைத்தும் பூட்டப்பட்டு, புலிகள் வண்டி ஓட்டிக்கொண்டு சென்றன. கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒரு கலங்கல் படமாக வண்டில்கள் மறைந்ததும் சொல்லி வைத்ததாற் போல அனைவரது கண்களிலும் கண்ணீர் வரம்புடைத்து கன்ன மேட்டில் ஏறியிறங்கியது. கண்களைக் கசக்கிக் கொண்டே திக்கற்றகாட்டில் ஆண்டவனிடம் முறையிட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

வண்டில் வடிவில் ஜீவனோபாயம் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்வை ஓட்ட மிகவும் சிரமப்பட்டனர். சிறிய வயது முதல் காட்டுத்தொழிலையே செய்து வந்த நபீக்கிற்கு வேறுமார்க்கம் தெரியவில்லை. நாளுக்கு நாள் புலிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. காட்டிலும், கரையிலும் கப்பம் கலந்த காட்டாட்சி கோலோச்சியது. இந்நிலையில் மேற்கொணடு வாழ்வையோட்ட வேறுவழியில்லை என்ற நிர்ப்பந்த நிலைக்கு வந்த நபீக், அப்படி ஒரு முடிவை எடுக்க நேர்ந்தது.

தொழில் இல்லாமல் அரைவயிறும், கால்வயிறுமாக கழியும் நிலையை மாற்ற வேறுவழியில்லாமல் தனது நிலைப்பாட்டை மனைவியிடம் தெரிவித்தார். எதிர்பார்த்தது போலவே சுகவீனமுற்றிருந்த நிலையிலும் அத்தாய் வெகுண்டெழுந்தாள். 

எனினும் வயிற்றுக்குச் சோறிட என்ன வழியென யோசித்துக் களைத்துப் போன நபீக்கும், மனைவியும் அப்படியொரு முடிவை மனதைக்கல்லாக்கிக் கொண்டு எடுத்தனர். மட்டுமல்லாமல் அந்த முடிவை நான் என்வாயால் சொல்லமாட்டேன் என மனைவி கூறிவிட்டாள். சரி நான் பார்க்கிறேன் என நபீக் பொறுப்பெடுத்தார். எடுத்த முடிவைப்பற்றி நினைத்து நினைத்து மனதுக்குள் அழுது கொண்டார். 

இன்று எப்படியும் சொல்லிவிடுவது என்ற முடிவுடன் அதுவும் ஒரேயடியாக சொல்லாமல் கட்டம் கட்டமாக சொல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டு, வசதியாக வாசலில் கிடந்த தென்னங்கட்டையில் குந்திக்கொண்டிருந்தார். அப்போது மூதூர் ஸாபி நகர், இமாம்ஸாபி வித்தியாலயத்தில்; கற்கும் மகள் றிசானா, முகம் நிறைய புன்னகையோடும், கனவுகள் சுமந்த கண்களோடும் குடிசையை விட்டு சொப்பிங் பேக் ஒன்றில் புத்தகங்களை சுமந்து கொண்டு வாசலுக்கு வர நபீக் தயாராகி

'புள்ள பள்ளிக்கிப் போறியா'
'ஓ... வாப்பா'
'பள்ளி உட்ட ஒடன... வெளயாடிக்கிட்டு நிக்காம, ஒடன ஊட்ட வந்திரனும்..ம்ம்ம்..'
'ஏன் வாப்பா'

'நீனும், நானும், உம்மாவும் பின்னாரம் கிண்ணியாக்குப் போய் அங்கிருந்து கொழும்புக் போவப்போறோம்'

'என்னத்துக்கு வாப்பா'
'நீ வாவன் சொல்றன்'

'கொழும்புக்குப் போகப்போகிறேம்' என்ற சொல் தேனாய் பாய்ந்திருக்கவேண்டும் றிசானாவின் நடையில் ஒரு துள்ளல். துடிப்பு.

தலைவாரிப் பூச்சூடாத குறையாக அண்டை வீட்டுப்பிள்ளைகளோடு றிசானா சிட்டெனப் பறக்க. வெளிநாட்டு விசயமாக மற்றும் பாஸ்போட்சமாச்சாரங்கள் பற்றிப் பேசிவர நபீக் புறப்பட்டார்.

ஒன்றுக்குப் பல தடவைகள் போய் வந்த ஹாஜிகளோ, சக்காத்தை சத்தான வகையில் பகிரும் திட்டங்களோ, தேவைக்கதிகமாக வீட்டைக்கட்டிக் கொண்டு ஹாயாக வாழும் சீமான்களோ அந்நேரம் அங்கில்லை நபீக்கைத் தடுக்க.





No comments

Powered by Blogger.