Header Ads



யாசிர் அரபாத்தின் ஜனாஸா மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது



பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் மரணமடைந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதிலிருந்து டி.என்.ஏ. சோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் யாசிர் அரபாத்தின் உடல் மீண்டும் இருந்தவாறே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

27-11-2012 காலை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையில் இருந்து தடுக்கப்பட்டு ரகசியமான முறையில் அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டதாக பலஸ்தீன நிர்வாகம் உறுதி செய்தது.

பலஸ்தீன மருத்துவர்களுக்கு மாத்திரமே யாசிர் அரபாத் உடல் வைக்கப்பட்டுள்ள பாகத்தை தொடவும், அதிலிருந்து மாதிரிகளை பெறவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரபாத்தின் மரண விசாரணையை மேற்கொண்டுவரும் சுவிட்சர்லாந்து, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நிபுணர்களின் முன்னிலையிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் யாசிர் அரபாத்தின் உடல் மீண்டும் இருந்தவாறே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது இராணுவ மரியாதை வழங்க பலஸ்தீன நிர்வாகம் முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது முன்னெடுக்கப்படவில்லை.

இதன் போது யாசிர் அரபாத்தின் அடக்கஸ்தலம் தோண்டி எடுக்கப்பட்டதும் அவரது உடல் மேலே எடுக்கப்படாமலும் அதன் ஒரு பாகம் மாத்திரமே திறக்கப்பட்டும் டி.என்.ஏ. சோதனைக்கான மாத்திரிகள் பெறப்பட்டதாக பலஸ்தீன வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் இராணுவ மரியாதை வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

“அடக்கஸ்தலத்திற்குள் இருந்தே மாதிரிகள் பெறப்பட்டு அவை பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்ப ட்டது” என பலஸ்தீன தரப்பில் கூறப் பட்டுள்ளது. யாசிர் அரபாத்தின் அடக்கஸ்தலம் அமைந்திருக்கும் ரமல்லாவில் உள்ள முகாதா ஜனாதிபதி வளாகத்தின் அரபாத் அடக்கம் செய்யப்பட்ட பகுதி நீல நிற திரையால் ஒருவாரத்திற்கு முன்னரே மூடப்பட்டது. எனினும் அவரது உடலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்ட பின் நேற்று பின்னேறத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அரபாத்தின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா தரப்பில் தனித் தனியாக சோதனை மேற்கொள்ளவுள்ளது. இதில் அரபாத்தின் உடலில் பொலொனியம் கதிரியக்கம் அல்லது நஞ்சூட்டப்பட்டதற் கான ஆதாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முடிவுகள் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.